தலைநகர் டெல்லியில் கொசு விரட்டியால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வெயில் காலம் என்பதால் இரவு நேரங்களில் கொசுக்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. கொசுக்கடியால் பலர் இரவு நேரங்களில் உறங்க சிரமம் ஏற்படுவதால் கொசுக்களை விரட்ட கொசு விரட்டி, மின் கொசு விரட்டி, கொசு கடியில் இருந்து பாதுகாப்பதற்காக தைல வடிவிலான மருந்துகளை பூசிக் கொல்வது மற்றும் கொசு வலை ஆகியவற்றை பயன்படுத்தி வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் டெல்லி சாஸ்திரி பார்க் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்றிரவு கொசு விரட்டி மருந்தை ஏற்றி வைத்து விட்டு குடும்ப உறுப்பினர்கள் தூங்க சென்றுள்ளனர். இரவு முழுவதும் எரிந்த கொசு விரட்டியில் இருந்து நெருப்பு அவர்களது படுக்கையில் பற்றி பரவியுள்ளது. படுக்கை பற்றியதால் ஏற்பட்ட புகையால், மூச்சுத்திணறி வீட்டில் தூங்கி கொண்டிருந்த அனைவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இன்று காலையில் வழக்கம்போல நீண்ட நேரமாகியும் சம்பந்தப்பட்ட வீட்டிலிருந்து யாரும் வெளியே வராததால், சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்போது வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர். வீட்டின் உள்ளே அறையில் 6 பேரும் சடலமாக காணப்பட்டனர்.
பின்னர் காவல்துறை சடங்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அழைத்து சென்றனர். காவல்துறையின் விசாரணையில் அவர்களது வீட்டில் கொசு விரட்டி துகள்கள் இருந்ததை கண்டறிந்தனர். அளவுக்கு அதிகமான கொசு விரட்டிகளை ஏற்றியதால் அதில் உள்ள கார்பன் மோனாக்சைடு என்ற நச்சு அறை முழுவதும் பரவியிருக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது குறித்து டெல்லி காவல்துறையின் கூடுதல் டிசிபி சந்தியா சுவாமி தெரிவித்ததாவது..
“சாஸ்திரி பார்க் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் இரவு நேரத்தில் படுக்கையின் கொசு விரட்டியின் நெருப்பு பரவியதால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்துள்ளனர். எரிந்து கொண்டிருந்த கொசு சுருளில் இருந்து வெளியான கார்பன் மோனாக்சைடால் மூச்சு திணறி சுயநினைவை இழந்து பின்னர் உயிரிழந்துள்ளனர்.” என கூடுதல் டிசிபி சந்தியா சுவாமி தெரிவித்துள்ளார்.