மேட்டுப்பாளையம் அருகே அரசு பேருந்தினுள் கொட்டிய மழைநீரால் நின்றபடியே பயணிகள் பயணம் செய்தனர்.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கன மழை
பெய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார
பகுதிகளில் கடந்த ஒரு மணி நேரமாக தொடர்ந்து கண மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் பேருந்துக்காக காத்திருந்தனர்.
காரமடை அடுத்துள்ள ஆதிமாதையனுர் பயணிகளை ஏற்றிச்செல்லும் 3E அரசு பேருந்து பேருந்து நிலையத்திற்குள் வந்தது. பேருந்தின் மேற்கூரையில் ஓட்டை ஏற்பட்டு பழுது பார்க்கப்படாமல் பயணிகளை ஏற்றிச் சென்றது. மழை காரணமாக மேற்கூரையின் ஓட்டை வழியாக மழைநீர் அதிக அளவில் கொட்டத் தொடங்கியது.
இதனால் பேருந்து முழுவதுமாக மழை தண்ணீர் ஓடியது. ஊட்டி சாலை கொண்டை ஊசி வளைவுகளில் காட்சியளிக்கும் சிற்றருவிகள் போல பேருந்துக்குள் ஆங்காங்கே மழை நீர் கொட்டியது. இதனால் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் என்ன செய்வது என தெரியாமல் இருககையில் இருந்து எழுந்து நின்றபடியே பயணம் செய்தனர்.







