இந்திய தேர்தல் ஆணையம் என்பது அரசியல் கட்சியில்லை என புதுச்சேரி அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரியில் தேர்தலை முன்னிட்டு விதிக்கப்பட்ட 144 தடை உத்தரவை ரத்து செய்யக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநில செயலாளர் ராஜாங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் அவசர வழக்காக விசாரிக்கப்பட்டது. அப்போது புதுவை தேர்தல் ஆணையம் சார்பில்,“ தேர்தலை முன்னிட்டு 144 தடை பிறப்பிக்க மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் உள்ளது என புதுச்சேரி அரசு வாதிட்டது. ஒவ்வொரு தேர்தலின்போதும் இதுபோன்று 144 தடை உத்தரவு பிறப்பிப்பது வழக்கம்தான்” என தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து விசாரணை நடத்திய நீதிபதிகள், அதிகாரம் இருக்கிறது என்பதற்காக அனைத்து வழக்குகளிலும் மரண தண்டனை விதிக்கிறோமா என கேள்வி எழுப்பினர். சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் நாட்டில் நாம் வாழ்கிறோம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். புதுச்சேரியில் பிறப்பிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவு குறித்து தெளிவுபடுத்தாவிட்டால், 144 தடை உத்தரவு ரத்து செய்யப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்து வழக்கை முடித்து வைத்தது.







