மின் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக ஊழியர் சங்கங்கள் அறிவித்திருந்தன. இந்த போராட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி சென்னையைச் சேர்ந்த சரவணன், ஏழுமலை ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் பொது நலவழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஊழியர் சங்கங்களின் கோரிக்கை தொடர்பாக டான்ஜெட்கோ பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த வேலைநிறுத்தப் போராட்டம் சட்ட விரோதமானது என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டது. பொதுமக்களின் பாதிப்பு, டான் ஜெட்கோவின் நிதிநிலை, எதிர்வரும் பொங்கல் பண்டிகை உள்ளிட்டவற்றை கருத்தில் கொள்ளாமல் இந்த போராட்டத்துக்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசரணைக்கு வந்தது. அப்போது மின்வாரிய ஊழியர் சங்கங்களின் கோரிக்கை தொடர்பாக இன்று காலை பேச்சுவார்த்தை துவங்கி உள்ளதாகவும், இது குறித்த அறிவிப்பை கடந்த ஐந்தாம் தேதியே அனுப்பிய போதும் வேலைநிறுத்தத்திற்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்தது சட்டவிரோதமானது என்றும் அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
மின்வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் ஆவின் பால் வினியோகம், மருத்துவமனை செயல்பாடுகள், பள்ளி கல்லூரிகளின் செயல்பாடுகள் பெருமளவில் பாதிக்கும் என்பதால், இந்த வேலைநிறுத்த போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் தமது வாதத்தின்போது குறிப்பிட்டார்.
இதையடுத்து மின் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தடை உத்தரவை அனைத்து தரப்பினருக்கும் உடனடியாக தெரிவிக்க வேண்டும் என அரசுக்கு, நீதிபதிகள் அறிவுறுத்தினர்.