மதுரையில் குற்ற சம்பவங்களை தடுக்க காவல்துறை நடவடிக்கை: 24 மணி நேரமும் ரோந்து பைக்குகளில் கண்காணிப்பு பணி!

மதுரை மாநகரில் குற்ற சம்பவங்களை தடுக்க 63 காவல்துறை ரோந்து பைக்குகள் வழியாக கண்காணிப்பு பணி, சுழற்சிமுறையில் 24 மணி நேரமும் ரோந்து பணி நடைபெறும் என மாநகர காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார். மதுரை…

மதுரை மாநகரில் குற்ற சம்பவங்களை தடுக்க 63 காவல்துறை ரோந்து பைக்குகள் வழியாக கண்காணிப்பு பணி, சுழற்சிமுறையில் 24 மணி நேரமும் ரோந்து பணி நடைபெறும் என மாநகர காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

மதுரை மாநகர காவல்துறைக்கு உட்பட்ட தல்லாகுளம், மதிச்சியம், திடீர் நகர், அண்ணாநகர், எஸ்.எஸ்.காலனி, புதூர் உள்ளிட்ட 24 காவல் நிலையங்கள் இயங்கி வருகிறது. இந்த காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கும் வகையிலும், குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையிலும் 24 மணி நேரம் சுழற்சி முறையில் ரோந்து காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக 63 பைக் ரோந்து வாகனங்கள் நவீன முறையில் சீரமைக்கப்பட்டு வழங்கப்பட்டது.

இதனை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் மாநகர காவல்துறை துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், ஆய்வாளர்கள் கலந்துகொண்டனர். இதைத்தொடர்ந்து 63 ரோந்து வாகனங்களும் ஆயுதப்படை மைதானத்தில் ஒரே நேரத்தில் ஒளிரும் விளக்குகளுடன் சைரன் ஒலியுடன் வலம் வந்து நிறுத்தி வைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து ரோந்து வாகனங்கள் அந்தந்த காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் ரோந்து பணிகளை தொடங்கினர். முன்னதாக ரோந்து வாகனங்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும், எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்பது குறித்தும் அவசர காலகட்டத்திலும் பொதுமக்கள் கூடும் இடங்களிலும் ரோந்து வாகனங்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் எனவும் எடுத்துரைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாநகர காவல் ஆணையர் லோகநாதன், “பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலும் காவல்துறையினரை எப்போதும் பொதுமக்கள் எளிதாக அணுகுமுறைகளும் இது போன்ற ரோந்து பணிகள் காவல்துறையினர் சிறப்பாக மேற்கொள்ளவுள்ளனர். 63 ரோந்து வாகன காவல்துறையினரும் சுழற்சி முறையில் பணியில் இருப்பார்கள். ஒவ்வொரு காவல் நிலையத்திலும் இருந்து அந்தந்த ரோந்து வாகனங்களை பணிகளுக்கு அனுப்பி வைக்க உத்தரவிட்டுள்ளோம். பொதுமக்கள் கூடும் இடங்களில் ரோந்து வாகனங்களில் உள்ள மைக் மூலம் உரிய அறிவுறுத்தல்களை வழங்குவார்கள். ரோந்து வாகனங்களில் எப்பொழுதும் ஒளிரும் விளக்குகள் எரிந்தபடி இருக்க வேண்டும். அப்போதுதான் பொதுமக்களுக்கு ரோந்து வாகனம் பணியில் இருப்பது தெரியவரும்” இவ்வாறு தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.