Paytm மூலம் ரூ.3 லட்சம் திருடப்பட்ட வழக்கு – பணத்தை திருப்பி வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

மருத்துவ மேற்படிப்பு மாணவியின் வங்கிக் கணக்கில் இருந்து திருடப்பட்ட 3 லட்சம் ரூபாயை திருப்பி வழங்கும்படி PAYTM-க்கு ஆணையிடும்படி, ரிசர்வ் வங்கிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருச்சியைச் சேர்ந்த மருத்துவ மாணவியின் வங்கி…

மருத்துவ மேற்படிப்பு மாணவியின் வங்கிக் கணக்கில் இருந்து திருடப்பட்ட 3 லட்சம் ரூபாயை திருப்பி வழங்கும்படி PAYTM-க்கு ஆணையிடும்படி, ரிசர்வ் வங்கிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சியைச் சேர்ந்த மருத்துவ மாணவியின் வங்கி கணக்கில் இருந்து 3 லட்சம் ரூபாய் PAYTM மூலம் திருடப்பட்டதாக சைபர் குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரில் பணத்தை திருப்பித் தர வங்கி நிர்வாகத்திற்கு உத்தரவிட கோரியும், புகார் மீது உரிய விசாரணை நடத்த கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மாணவி வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மின்னணு பண பரிவர்த்தனைகளை பயன்படுத்தும்படி பொதுமக்களை ஊக்குவிக்கும் அதேவேளையில், மோசடிகளால் வாடிக்கையாளர்கள் அலைக்கழிக்கப்படுவது வேதனை அளிக்கிறது என தெரிவித்தார்.

மேலும், எந்த தவறும் செய்யாத மாணவி பணத்தை பறிகொடுத்துள்ளதாக கூறிய அவர், பாதிக்கப்பட்டவருக்கு பணத்தை திருப்பி கொடுக்காமல், வங்கி நிர்வாகமும், PAYTM நிறுவனமும் மாறி மாறி பழிபோடுவது ஏற்றுக்கொள்ள கூடியது அல்ல என சாடினார். மேலும், இரண்டு வாரங்களில் மாணவியின் பணத்தை திரும்ப அளிக்க வேண்டுமென PAYTM நிறுவனத்திற்கு ஆணையிடும்படி, ரிசர்வ் வங்கிக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.