பொன்னமராவதியில் உள்ள பட்டமரத்தான் கோயிலில் 63 ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழா கோலாகலமாக நடைபெற்றதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி நகரின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் வரலாற்று சிறப்புமிக்க கோயில்களில் ஒன்றான பட்டமரத்தான் கோயில், இப்பகுதிமக்களின் காவல் தெய்வமாக விளங்குகிறது. இந்த கோயிலுக்கு வந்து வழிபடுவதன் மூலமாக வாழ்வில் பல்வேறு நன்மைகள் கிடைப்பதாக இதன் வரலாறு கூறுகிறது. மேலும் இக்கோயிலில் ஆண்டுதோறும் பூச்சொரிதல் 10 நாட்கள் வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டுக்கான பூச்சொரிதல் விழா தொடங்கிய நிலையில், விழாவின் தொடக்கமாக சோழீஸ்வரர், காலபைரவர், அழகியநாச்சியம்மன், மலையாண்டி சுவாமி, பொன்னர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.
தொடர்ந்து விழாக்குழு, நாட்டுக்கல், பாலமேடு,பாண்டிமான் கோயில் வீதி, இந்திராநகர் சங்கரன்குண்டு, அண்ணா நகர் உள்ளிட்ட சுற்றுவட்டாரத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பால்குடம் மற்றும் பூத்தட்டு எடுத்துவந்து பட்டமரத்தான் சாமிக்கு சாத்தி வழிபட்டனர்.
பின்னா் பக்தர்கள் கொண்டு வந்த பால்குடங்கள் சாமிக்கு குடம் குடமாக அபிஷேகம் செய்யப்பட்டு விழாவிற்கான ஏற்பாடுகளை பட்டமரத்தான் விழாக்குழுவினர் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டன. மேலும் இவ்விழாவில் ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
—ரூபி.







