இந்திய அளவில் செயல்படும் பிரபல ஊடக நிறுவனமான ANIன் டிவிட்டர் கணக்கை ட்விட்டர் நிறுவனமே முடக்கியுள்ளது.
இந்திய அளவில் செயல்படும் பிரபல ஊடக நிறுவனமான ஏசியா நியூஸ் இண்டர்நேஷனல் (ANI) பல மாநிலங்களில் மட்டுமல்லாது பிரத்யேகமாக தெற்கு ஆசிய நாடுகளில் பல பத்திரிக்கையாளர்களை கொண்டு செயல்படுகிறது. மிகப் பெரிய ஊடக கட்டமைப்பை கொண்டுள்ள இந்த நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தை 70 லட்சட்த்திற்கும் மேற்பட்டோர் பின் தொடர்கின்றனர்.
ANI ஊடக நிறுவனத்திற்கு ட்விட்டர் நிறுவனம் ஏற்கனவே கோல்டன் வெரிஃபைடு வழங்கியிருந்தது. இந்த நிலையில் ANI நிறுவனத்தின் ட்விட்டர் கணக்கை ட்விட்டர் நிறுவனம் முடக்கியுள்ளது. இதனால் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இது தொடர்பாக ANI ன் ஆசிரியர் ஸ்மிரிதி பிரகாஷ் ”ANI முடக்கப்பட்டதற்கான ஸ்க்ரீன் ஷாட்டை “ பகிர்ந்துள்ளார். டிவிட்டரின் வயது வரம்பு பிரிவில் இந்த கணக்கு முடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
டிவிட்டர் கணக்கினை தொடங்குவதற்கான குறைந்தபட்ச வயது 13 ஆகும். ஆனால் ANIன் ட்விட்டர் கணக்கினை தொடங்கும் போது அதனை தொடங்கியவர் அதன் வயதை 13க்கும் கீழ் குறிப்பிட்டுள்ளதாக ட்விட்டர் நிறுவனத்தின் தரப்பில் அனுப்பப்பட்டுள்ள மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியதிலிருந்து ஏராளமான மாற்றங்களும் அதிரடி அறிவிப்புகளும் வெளியான நிலையில் சமீபத்தில் ப்ளூ டிக்கிற்கு கட்டணம் செலுத்தாத திரைப் பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகளின் ப்ளு டிக் அதிரடியாக நீக்கப்பட்ட நிலையில் ANIன் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.







