தமிழகத்தில் உள்ள ஆறு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வரும் ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது. இதில் இரு உறுப்பினர்கள் அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளது. இந்த இரு பதவியை பெறுவதில் அதிமுக மூத்த தலைவர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.
அதிமுக சார்பில் இப்பதவியை பெற அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகியோருடன் லாபி செய்யும் பணியில் மூத்த நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர். அதிமுகவின் மீடியா பீரங்கியாக செயல்படும் முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார் இப்பதவியை பெற கடும் முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக தெரிகிறது. அதேபோல் முன்னாள் அமைச்சர்கள் சிவி சண்முகம், பொன்னையன், கோகுல இந்திரா மற்றும் வில்லிவாக்கம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெசிடி பிரபாகர் உள்ளிட்டோர் இந்த ரேசில் இடம் பெற்றுள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுதொடர்பாக பேசிய ஜெயகுமார், யாருக்கு என்ன பதவி கொடுக்க வேண்டும் என்பதை அதிமுக தலைமை முடிவெடுக்கும் எனக் கூறினார். வெளியில் இப்படி கூறினாலும், உள்ளுக்குள் அவருக்கு இந்த பதவி மீது அளவுகடந்த ஆசை உள்ளதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் காலியாகவுள்ள 6 பதவிகளில் திமுக 3 எளிதாக கைப்பற்றிவிடும் எனத் தெரிகிறது. மற்றொன்றை கூட்டணி கட்சியான காங்கிரசிற்கு கொடுக்க வாய்ப்புள்ளது. காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை இந்த பதவியை பெற முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் கடும் முயற்சி மேற்கொண்டு வருகிறார். அதேபோல் அக்கட்சியின் மாநிலத்தலைவர் கேஎஸ் அழகிரியும் தமக்கு கிடைக்காத என ஏக்க கண்ணுடன் உள்ளாராம்.
திமுகவை பொறுத்தவரை சிதம்பரத்திற்கு கொடுப்பதை விட கேஎஸ் அழகிரிக்கு கொடுத்தால் நன்றாக இருக்கும் என்றே நினைக்கிறதாம். 2ஜி உள்ளிட்ட விவகாரங்களில் தேவையின்றி திமுகவின் இமேஜை டேமேஜ் செய்தது, அப்போது மத்திய அமைச்சராக இருந்த சிதம்பரம்தான் என்ற வருத்தம் இன்னமும் உள்ளதாம். குறிப்பாக இலங்கை தமிழர்கள் பிரச்சனையில் அப்போதைய முதல்வராக இருந்த கருணாநிதியிடம் தவறான தகவல்களை கூறியது சிதம்பரம்தான், அப்படிபட்டவருக்கு நாம் ஏன் உதவ வேண்டும். ஏற்கனவே அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தை வெற்றி பெற செய்ததற்கு பலனாக, 5 மாநில தேர்தல் தோல்வி நேரத்தில் நெட்பிளிக்சில் என்ன படம் பார்க்கலாம் என டுவிட்டரில் கேட்டு காங்கிரஸ் கட்சியின் மானத்தை வாங்கினார். இப்படிபட்டவர்களுக்கு நீங்கள் மீண்டும் வாய்ப்பு வழங்க போகிறீர்களா ? என காங்கிரஸ் தலைவர்களை திமுக தலைமை கேட்டுள்ளதாம்.
இருப்பினும் நாடாளுமன்றத்திற்கு சிதம்பரத்தின் அறிவுகாங்கிரசிற்குத் தேவை என அக்கட்சியின் தலைமை கருதுகிறதாம். திமுக பொறுத்தவரை, தேனி மாவட்ட செயலாளராக உள்ள தங்க தமிழ் செல்வன் ராஜ்யசபா பதவி தனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் உள்ளார்.கடந்த முறையே இவரது பெயர் அடிப்பட்டது. கடைசி நேரத்தில் கிடைக்கவில்லை என்பதால் இந்த முறை தலைமை தனக்கு உரிய அங்கீகாரம் வழங்கும் என்ற நம்பிக்கை அவருக்கு உள்ளது. மற்ற இரு உறுப்பினர்கள் பதவி யாருக்கு என்பதை திமுக தலைமை மிகவும் ரகசியமாக வைத்துள்ளது.
இராமானுஜம்.கி