சிவகளையில் திறந்தவெளி அருங்காட்சியகம்: முதல் கட்டமாக 23 லட்சம் ஒதுக்கீடு

ஸ்ரீவைகுண்டம் அருகே, சிவகளையில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைப்பதற்காக முதல் கட்டமாக 23 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் தொடக்கங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சிவகளை பகுதியில் ஒரு பரம்பு ஒன்று…

ஸ்ரீவைகுண்டம் அருகே, சிவகளையில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைப்பதற்காக முதல் கட்டமாக 23 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் தொடக்கங்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சிவகளை பகுதியில் ஒரு பரம்பு ஒன்று பரந்து விரிந்து காணப்பட்டது. இந்த பகுதியில் ஏராளமான தொல்லியல் பொருட்கள் கிடப்பதாகவும், அதனை பாதுகாக்க வேண்டும் என்றும் அப்பகுதியைச் சேர்ந்த வரலாற்று ஆசிரியர் மாணிக்கம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தார். இதனை தொடர்ந்து நியூஸ் 7 தமிழ் வாயிலாக பல்வேறு செய்திகள் மற்றும் செய்தி தொகுப்புகள் வெளியிடப்பட்டது.

இதையடுத்து கடந்த 2019 முதல் தொடர்ந்து மூன்று கட்டங்களாக மாநில தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடந்தது. குறிப்பாக முதுமக்கள் தாழிகள், இரும்பு பொருட்கள், பானைகள், பானை ஓடுகள், வெளிநாட்டு பானை ஓடுகள் என ஏராளமான பொருட்கள் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட முதுமக்கள் தாழியில் இருந்து நெல்மணிகள் கண்டெடுக்கப்பட்டது.

இதனையும் படியுங்கள்: போடி அருகே காட்டுத் தீ – அணைக்க முடியாமல் திணறும் வனத் துறையினர்

அந்த நெல்மணியின் வயது 3200 ஆண்டுகள் பழமையானது என கடந்த வருடம் 2021-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தது அனைவரையும் சிவகளை பக்கம் திரும்பி பார்க்க வைத்தது. இதற்கிடையில் சிவகளையில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதுகுறித்து நியூஸ் 7 தமிழ் வாயிலாகவும் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது சிவகளை பரம்பு பகுதியில் கடந்த 2 கட்டங்களாக நடந்த அகழாய்வு பணியில் தோண்டப்பட்ட குழியில் ஏராளமான முதுமக்கள் தாழிகள்
கண்டுபிடிக்கப்பட்டன.

தற்போது அந்த முதுமக்கள் தாழிகள் அனைத்தும் அதே குழியில் தான் உள்ளது. குழிகளும் மூடப்படவில்லை. இதனால் சிவகளையில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருந்ததாக கூறி வந்தனர். இந்த நிலையில் தற்போது சிவகளை பரம்பு பகுதியில் தோண்டப்பட்ட குழியின் மேல் முதல் கட்டமாக 23 லட்சம் மதிப்பிலான தகரத்தால் ஆன ஷெட் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது.

இந்த பகுதியில் 7-க்கு 13 மீட்டர், 7-க்கு 11 மீட்டர் என இரண்டு இடங்களில் ஷெட் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பொருட்களை பாதுகாத்து வைப்பதற்காக 10-க்கு 6 மீட்டர் அளவில் ஒரு ஷெட் அமைக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிகள் அனைத்தும் மார்ச் மாத இறுதியில் நிறைவு பெறும் என்று கூறப்படுகிறது. தற்போது வரை சிவகளையில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது என்று
தமிழக அரசு தெரிவிக்காத நிலையில் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சமூக ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.