தேநீரில் புழு இருந்ததை கேள்வி கேட்ட தூய்மைப்பணியாளர்களை சாதிரீதியாக இழுவுபடுத்திய தொடர்பாக நியூஸ் 7 தமிழில் செய்தி வெளியான நிலையில் கடை உரிமையாளர் மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை தேர்முட்டி வீதியில் சூர்யா பேக்ஸ் எனும் டீக்கடையில் தூய்மைப் பணிகளை முடித்த தூய்மை பணியாளர்கள் தேநீர் குடிக்க சென்றுள்ளனர். அப்போது மாயவன் என்ற நபர் குடித்த தேநீரில் புழு இருந்ததையடுத்து உடனே அவர் திடீரென்று வாந்தி எடுத்த நிலையில் அவர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக அங்கு தேநீர் குடித்த தூய்மைப்பணியாளர்கள் கடையின்
உரிமையாளரிடம் கேட்ட போது சாக்கடை சுத்தம் செய்யும் உங்களிடம் இருந்து தான்
இந்த புழு வந்துருக்கும் என்று பதில் அளித்துள்ளார். அது மட்டுமல்லாமல் சாதி ரீதியாக திட்டி ,கடையிலிருந்து முதலில் வெளியேறுங்கள் கடையை சுத்தம் செய்ய வேண்டும் என்று அவர்களை கடையிலிருந்து வெளியேற்றியிருக்கிறார்.
தேநீரில் புழு இருந்தது தொடர்பாகவும், தூய்மை பணியாளர்களை சாதி ரீதியாக திட்டியது தொடர்பாகவும் தூய்மை பணியாளர்கள் காவல் ஆணையாளரிடம் புகார் அளித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக முதலில் நியூஸ் 7 தமிழ் செய்தி வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் நியூஸ் 7 தமிழின் எதிரொலியாக தூய்மைப்பணியாளர் மாயவனை சாதிரீதியாக திட்டிய கடை உரிமையாளர் ராமசாமி மீது எஸ்சி- எஸ்டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் கோவை பெரிய கடை வீதி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.







