நெல்லை மாவட்டம் களக்காடு அருகே முன்னாள் காதலனை கொலை செய்ய கூலிப்படையை ஏவி கொலை செய்ய முயன்ற +2 பள்ளி மாணவியை போலீசார் தேடி வருகின்றனர்.
பணக்குடி அருகே உள்ள புஷ்பவனம் கிராமத்தைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவர் விக்னேஷ், சக மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார். திடீரென அந்த மாணவி, விக்னேஷை பிரிந்து வேறு மாணவருடன் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த விக்னேஷ் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை காட்டி மாணவி வீட்டில் பெண் கேட்கப்போவதாக கூறியுள்ளார்.

அதிர்ச்சியடைந்த அந்த மாணவி, விக்னேஷை கொலை செய்ய கூலிப்படையினரின் உதவியை நாடியதாக தெரிகிறது. கூலிப்படையினர் அளித்த ஆலோசனையின் பேரில், மாணவி விக்னேஷிடம் பேசி நெல்லை அருகே உள்ள பெத்தானியா மலைப்பகுதிக்கு வரவழைத்துள்ளார். தனியாக வந்த விக்னேஷை, கூலிப்படையினர் நாட்டு வெடிகுண்டுகளையும், அரிவாள்களையும் காட்டி, மிரட்டல் விடுத்துள்ளனர். அவர்களிடமிருந்து தப்பிச்சென்று விக்னேஷ் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, மலைப்பகுதியில் பதுங்கியிருந்த கூலிப்படையினர் 4 பேரை போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய பள்ளி மாணவி உள்ளிட்ட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.







