பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியுருப்பதாவது, “ கடந்த ஜூலை 22-ஆம் தேதி மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் (MoHUA) அனுப்பிய கடிதமானது, கோயம்புத்தூர் மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கைகள் (Detailed Project Reports – DPRs) மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. இதை சிலர் நமது இரு நகரங்களுக்கும் எதிரான தீர்ப்பாக சித்தரிக்க முயல்கின்றனர். ஆனால் அது முற்றிலும் தவறான புரிதலாகும்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் DPR-கள் திருப்பி அனுப்பப்பட்டபோதும் ஏற்கனவே நான் கூறியதுபோல, தீர்வு என்பது நமது திட்ட அறிக்கைகள் மற்றும் ஆவணங்களில் உள்ள தொழில்நுட்ப மற்றும் கொள்கை குறைபாடுகளைச் சரிசெய்வதில்தான் உள்ளது. மாறாக உள்கட்டமைப்பு திட்டமிடலை மத்திய அரசு அல்லது பாஜகவுக்கு எதிரான அரசியல் முழக்கமாக மாற்றுவதில் இல்லை. கடந்த 2025 நவம்பரில், MoHUA முதல் DPR-களை முழுமையான ஆய்வுக்குப் பிறகு திருப்பி அனுப்பியது. அப்போது அதில் மக்கள் தொகை, தினசரி பயணிகளின் பயன்பாடு, உயர்மட்ட நிலையங்கள் அமைப்பதில் உள்ள சிக்கல்கள் உள்ளிட்ட முக்கியமான குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டன.
ஆனால் இதற்குப் பிறகு, மீண்டும் கடந்த மே மாதத்தில் மாநில அரசு திருத்தப்பட்ட திட்டங்களை மீண்டும் சமர்ப்பித்தது. ஆனால் MoHUA பதில் கடிதத்தில் ஏற்கனவே கூறப்பட்ட பிரச்சினைகள் எதுவும் சரிசெய்யப்படவில்லை என்பதைச் சுட்டிக் காட்டி தெளிவுபடுத்தியது.
மேலும், சராசரி பயண தூரம் சுமார் 15 கிலோமீட்டர் அல்லது அதற்கு மேல் இருக்கும் நகரங்களில்தான் இத்தகைய பெரிய அளவிலான மெட்ரோ முதலீடுகள் நியாயப்படுத்தப்பட முடியும் என்றும் கூறியுள்ளது. இதன் அடிப்படையில், கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் Bus Rapid Transit System (BRTS) உள்ளிட்ட பேருந்து மையப்படுத்தப்பட்ட பொதுப் போக்குவரத்து அமைப்புகளை வலுப்படுத்துமாறு MoHUA பரிந்துரைத்துள்ளது. எனவே தற்போதைய தரவுகள் அடிப்படையில் மெட்ரோ திட்டத்திற்கு அனுமதி வழங்க முடியவில்லை என்பதே அதன் நிலைப்பாடு.
இந்த சூழலில், போபால், இந்தூர், பாட்னா, கொச்சி மற்றும் ஆக்ரா போன்ற நகரங்களில் மக்கள் தொகை தரவுகளை சரியாகப் பயன்டுத்தி, Comprehensive Mobility Plan (CMP) சமர்ப்பித்தும் தங்களது நகரங்களின் மெட்ரோ திட்டங்களுக்கான ஒப்புதலைப் பெற்றன. ஆனால் கோவைக்கான சரியான திட்டமிடலை வெளிப்படுத்தும் வகையில் முறையான DPR தயாரிக்கப்படவில்லை. நடைமுறைக்கு ஏற்ற Origin-Destination தரவுகள் பயன்படுத்தப்படவில்லை. நமது சாலைகளின் உண்மையான அகலத்தை கொண்டு பாதை அமைப்புகள் (Alignments) வடிவமைக்கப்படவில்லை. எந்தப் பொறியாளரும் ஆய்வுக்குழுவின் முன் நியாயப்படுத்த முடியாத யூகங்களின் அடிப்படையில்தான் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டிருந்தது. மேலும், நாடாளுமன்றத்திலும் இந்த DPR-களில் குறிப்பிட்ட தொழில்நுட்ப குறைபாடுகள் இருப்பது பதிவு செய்யப்பட்டது.
மத்திய பா.ஜ.க. அரசு சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத்திற்கு (Chennai Metro Phase-II) ஒப்புதல் வழங்கியது முதல், தமிழ்நாட்டில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் ரயில்வே முதலீடுகள் வரை, மாநிலத்தின் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது. Metro Rail Policy-யின் கீழ் நிர்ணயிக்கப்பட்டுள்ள மக்கள்தொகை, பயணிகள் பயன்பாடு (Ridership), பொறியியல் சாத்தியக்கூறு (Engineering Feasibility) மற்றும் பொருளாதார சாத்தியக்கூறு (Economic Viability) ஆகிய அளவுகோல்களை பூர்த்தி செய்யும் எந்தப் பொதுப் போக்குவரத்து திட்டத்திற்கும் மத்திய அரசு முழுமையான ஆதரவை வழங்கத் தயாராகவே உள்ளது.
எனவே போபால், இந்தூர், பாட்னா, கொச்சி மற்றும் ஆக்ரா போன்ற நகரங்களுக்கு மெட்ரோ திட்டத்தை பெற்றுத்தந்த அதே ஒழுங்குமுறையுடன் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு முந்தைய DPR-களில் ஏற்பட்ட தவறுகளைச் சரிசெய்து தற்போதைய Comprehensive Mobility Plan-ஐ அடிப்படையாகக் கொண்டு, Local Planning Area மற்றும் Urban Agglomeration மக்கள் தொகைத் தரவுகளின் அடிப்படையில் DPR-களை மறுசீரமைக்க வேண்டும்.
மேலும் Metro Rail Policy-யில் குறிப்பிடப்பட்டுள்ள 20 லட்சம் மக்கள்தொகை அளவுகோலுக்கு ஏற்ப உண்மையான தரவுகளுடன் அறிக்கையும், பொறியியல் வடிவமைப்புகள், பயணிகளின் எண்ணிக்கை, பயண நேரச் சேமிப்பு ஆகியவற்றை மீண்டும் மறுக்க முடியாத ஆய்வாக DPR தயாரித்து அனுப்பி மதுரை, கோவை மக்களின் மெட்ரோ ரயில் போக்குவரத்து கனவினை நனவாக்க முழு முயற்சி எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




