நியூஸ்7 தமிழ் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் – தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம்

நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசபிரபு மீதான தாக்குதலுக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.  நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி நிறுவனத்தில் 7 ஆண்டுகளாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகா செய்தியாளராக பணியாற்றி வருபவர்…

நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசபிரபு மீதான தாக்குதலுக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி நிறுவனத்தில் 7 ஆண்டுகளாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகா செய்தியாளராக பணியாற்றி வருபவர் நேசபிரபு.  இவர் நேற்று செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த போதும், மற்ற நேரங்களில் மர்ம நபர்கள் சிலர் நோட்டம் விட்டுள்ளனர். இவரைப் பற்றிய தகவல்களையும் விசாரித்துள்ளனர்.

தன்னை நோட்டம் விடும் மர்ம நபர்கள் குறித்து காவல்துறைக்கு நேசபிரபு தகவல் தெரிவித்துள்ளார். தனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினரிடம் கூறிய நேசபிரபுவிடம், நேரில் வந்து புகார் அளிக்கும்படியும், போதிய காவலர்கள் இல்லை என்றும் அலட்சியம் காட்டியுள்ளனர்.

இதையடுத்து மீண்டும் மர்ம நபர்கள் பின்தொடர பொதுமக்கள் நடமாட்டம் இருக்கும் பகுதிக்குச் சென்று மீண்டும் மீண்டும் காவல்துறையினரின் உதவியை நேசபிரபு கேட்டுள்ளார். அவ்வாறு காவல்துறையினரிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே, 5 கார்களில் வந்த மர்ம கும்பல் நேசபிரபுவை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர்.

இதனால் கை, கால், முகம் என உடலின் பல்வேறு பகுதிகளில் வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சரிந்த நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசபிரபுவை, தகவலறிந்து வந்த காவல்துறையினர் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து கோவை தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்கள்:  செய்தியாளர் நேசப்பிரபு மீது கொலைவெறி தாக்குதல் – நியூஸ்7 தமிழ் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்!!

செய்தியாளர் நேசபிரபு தாக்கப்பட்டதை அறிந்த நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. மேலும் மெத்தனப்போக்கில் செயல்பட்ட காவல்துறையினர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில் செய்தியாளர் நேசப்பிரபு மீதான தாக்குதலுக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.  இதுதொடர்பாக அவர் தனது X தள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது :

“திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் நியூஸ்-7 தமிழ் தொலைக்காட்சி செய்தியாளர் நேசபிரபு கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ள சம்பவம் அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். பாதிக்கப்பட்ட செய்தியாளர் நேசபிரபு விரைவில் பூரண உடல்நலம் பெற்று வீடுதிரும்ப எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

அவரது குடும்பத்திற்கு எனது ஆறுதலை தெரிவிப்பதோடு, கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது உடனடியாக சட்டபூர்வ நடவடிக்கை எடுத்து பத்திரிக்கையாளர்கள் சுதந்திரமாக செயல்படுவதற்கான சூழ்நிலையை உறுதிசெய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.