’ஃபர்ஸி’ வெப் தொடரின் காட்சியை மறு உருவாக்கம் செய்யும் நோக்கில், காரில் இருந்து பணத்தை அள்ளி வீசிய இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஷாகித் கபூர், விஜய் சேதுபதி நடித்து அண்மையில் வெளியான வெப் தொடர் ’ஃபர்ஸி’. இத்தொடரில், காரில் சென்றுகொண்டிருக்கும் போது பணத்தை வீசுவது போன்ற காட்சி ஒன்று இடம்பெற்றுள்ளது. இதனை மறு உருவாக்கம் செய்யும் வகையில், ஹரியானா மாநிலம், குருகிராமில் காரில் சென்று கொண்டிருந்த இளைஞர்கள் சிலர் ரூபாய் நோட்டுக்களை சாலையில் வீசினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதையும் படியுங்கள் : ”வெறுப்பை தூக்கி கடாசிவிட்டு முன்னோக்கி போய் விடுங்கள்!” – செல்வராகவன் அட்வைஸ்
இதையடுத்து ஹரியானா போலீசார், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். ஜோராவர் சிங் கல்சி மற்றும் குர்ப்ரீத் சிங் ஆகிய இரு இளைஞர்கள் தான் காரில் இருந்து ரூபாய் நோட்டுக்களை சாலையில் வீசியது தெரியவந்தது.
தொடர்ந்து அந்த இரு இளைஞர்களையும் கைது செய்த ஹரியானா போலீசார், வீடியோ பதிவு செய்தவர்களை தேடி வருகின்றனர். மேலும், கைதான ஜோராவர் சிங் கல்சி மற்றும் குர்ப்ரீத் சிங் ஆகியோரிடமிருந்து ரூபாய் நோட்டுக்களையும், அவர்கள் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்துள்ளனர்.







