இன்று நடைபெற்ற போகி கொண்டாட்டங்களின்போது சென்னையில் குப்பை மற்றும் பிளாஸ்டிக் எரிப்பு குறைந்திருந்ததாக, சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், போகிப் பண்டிகையின்போது சென்னை மாநகர காற்று தரத்தினை கண்காணிக்க காற்று மாதிரி சேகரிப்பு செய்து ஆய்வு செய்யப்பட்டதாக கூறியுள்ளார்.
இந்த ஆய்வின்படி காற்றில் கலந்துள்ள நுண் துகள் அளவு குறைந்தபட்சமாக 50 மைக்ரோ கிராமாகவும், அதிகபட்சமாக 113 மைக்ரோ கிராமாகவும் இருந்ததாக தெரிவித்துள்ளார். போகி கொண்டாட்டத்தையொட்டி, சென்னை மாநகராட்சியின் 14 மண்டலங்களில் காற்றுத் தர குறியீடு மிதமான அளவில் இருந்ததாக அவர் கூறியுள்ளார்.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் விடுத்த வேண்டுகோளை அடுத்து, பொது மக்கள் பெருமளவு குப்பைகளையோ, பிளாஸ்டிக் கழிவுகளையோ எரிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் விமான போக்குவரத்து மற்றும் மெட்ரோ ரயில் சேவையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.







