டெல்லி அருகே 3.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, டெல்லி, தேசிய தலைநகர் பிராந்தியம் மற்றும் வட இந்தியாவின் சில பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
ஹரியானாவின் ஃபரிதாபாத் அருகே, மாலை 4.08 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் மையம் ஃபரிதாபாத்திலிருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாகவும் நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. நில அதிர்வு உணரப்பட்டதையடுத்து, பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.
இந்த மாத தொடக்கத்தில், டெல்லி, என்சிஆர் மற்றும் வட இந்தியாவின் பல பகுதிகளில் வலுவான நிலநடுக்கம் உணரப்பட்டது. கடந்த 3ஆம் தேதி நேபாளத்தில் ஏற்பட்ட அந்த நிலநடுக்கம் வட மாநிலங்களை உலுக்கியது. அந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.2ஆக பதிவானது. தலைநகர் டெல்லியில் இந்த மாதத்தில் மட்டும் இரண்டாவது முறையாக வலுவான நிலநடுக்கம் உணரப்படுகிறது. இதனால், டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.







