சென்னை சைதாப்பேட்டை புறநகர் மருத்துவமனையில் உள்ள கிணற்றில் ஊசி, மாத்திரை அட்டைகள் உள்ளிட்ட மருத்துவக் கழிவுகள் நிறைந்து காணப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் தற்போது கிணற்றைச் சுத்தம் செய்துள்ளது.
சென்னை சைதாப்பேட்டை இயங்கி வரும் புறநகர் மருத்துவமனையில் கிணறு ஒன்று உள்ளது. அந்த கிணற்றில் மருத்துவமனையில், பயன்படுத்தப்படும் ஊசி, மாத்திரை அட்டைகள் உள்ளிட்ட மருத்துவக் கழிவுகள் அந்த கிணற்றில் போடப்படுவதாகவும், இதனால் அந்த மருத்துவமனைக்குத் தினசரி வரும் ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு நோய் பரவும் அபாயம் இருப்பதாகப் பொதுமக்கள் தொடர்ந்து குற்றச்சாட்டு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், மருத்துவமனை நிர்வாகம் கிணற்றைச் சுத்தம் செய்துள்ளது.
மிகுந்த ஆபத்தான கழிவுகளாகப் பார்க்கப்பட்ட மருத்துவக் கழிவுகளை, சுத்தம் செய்யும் முயற்சியில் ஈடுபட்ட ஊழியர்கள் கயிற்றில் கூடை கட்டி பாதுகாப்பாக அகற்றினர். இதேபோல், தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் முறையாக மருத்துவக் கழிவுகள் கையாள்வதை மருத்துவத்துறை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.








