தீஸ்தா செடல்வாட் கைது அரச பயங்கரவாதம் – விசிக தலைவர் திருமாவளவன்

சமூக செயற்பாட்டாளர் தீஸ்தா செடல்வாட் கைது செய்யப்பட்டிருப்பதை அரச பயங்கரவாதம் என விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார். குஜராத் கலவர வழக்கிலிருந்து பிரதமர் மோடியை நீதிமன்றம் விடுவித்ததையடுத்து வழக்கு தொடர்பாக தவறான ஆதாரங்களை அளித்ததாக…

சமூக செயற்பாட்டாளர் தீஸ்தா செடல்வாட் கைது செய்யப்பட்டிருப்பதை அரச பயங்கரவாதம் என விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.

குஜராத் கலவர வழக்கிலிருந்து பிரதமர் மோடியை நீதிமன்றம் விடுவித்ததையடுத்து வழக்கு தொடர்பாக தவறான ஆதாரங்களை அளித்ததாக சமூக செயற்பாட்டாளர் தீஸ்தா செடல்வாட் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு நாடு முழுவதும் இருந்து பரவலாக எதிர்ப்பு எழுந்து வருகிறது.

இந்நிலையில், தீஸ்தா செடல்வாட் கைது அரசப் பயங்கரவாதம் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவரது ட்வீட் செய்துள்ளதாவது,

“மனித உரிமையை நிலை நாட்டவும் பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிட்டவும் நேர்மை தவறாமல் துணிவுடன் சட்டபூர்வமான கடமையை நிறைவேற்றும் காவல்துறை அதிகாரிகள் இவ்வாறு திட்டமிட்டு பழி வாங்கப்பட்டால், எங்ஙனம் பிற அதிகாரிகள் நேர்மையுடன் செயல்பட முன்வருவர்?

காவல் அதிகாரிகள் சஞ்சீவ் பட், ஸ்ரீகுமார், ஊடகவியலாளர் தீஸ்தா செடல்வாட் ஆகியோர் குஜராத் வெறியாட்டத்தின் போது இசுலாமியர் படுகொலை செய்யப்பட்டபோது அதனை எதிர்த்துத் துணிவாக செயல்பட்டனர் என்பதால் தற்போது சிறைப்படுத்தப் பட்டுள்ளனர். இது அரசியல்வாதிகளை ஆட்சியாளர்களை எவ்வகையிலும் சீண்டவே கூடாதென அச்சுறுத்தும் அரசப் பயங்கரவாதமே.” என கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.