மெரினா லூப் சாலை வழக்கு: இடையூறு இல்லாமல் மீன்கடைகளை ஒழுங்குபடுத்த வேண்டும் – மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

மெரினா லூப் சாலையில் போக்குவரத்துக்கு எந்த இடையூறும் இல்லாமல் மீன்கடைகளை ஒழுங்குபடுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சிக்கு, உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னை கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான லூப் சாலையை ஆக்கிரமித்து,…

மெரினா லூப் சாலையில் போக்குவரத்துக்கு எந்த இடையூறும் இல்லாமல் மீன்கடைகளை ஒழுங்குபடுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சிக்கு, உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான லூப் சாலையை ஆக்கிரமித்து, அப்பகுதி மீனவர்கள் மீன் கடைகள் அமைத்துள்ளதாகவும், அதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், லூப் சாலையின் மேற்குபகுதி ஆக்கிரமிப்புகளை அகற்றி அறிக்கை தாக்கல் செய்யவும், அங்குள்ள உணவகங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளதா என ஏப்ரல் 18-ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்யவும் மாநகராட்சிக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் பாலாஜி அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மீனவர்கள் தரப்பில் வழக்கில் தங்களையும் இணைக்க கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. லூப் சாலை பொது சாலையல்ல என்றும், மீனவர்கள் பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டது எனவும், சாந்தோம் சாலை விரிவாக்கம் செய்யும் வரை மட்டும் தற்காலிகமாக லூப் சாலை போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் என மாநகராட்சி தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது எனவும் மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், லூப் சாலை விரிவாக்கம் செய்யக் கூடாது; நடைபாதைகள் அமைக்க கூடாது என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவையும் மீறி, மாநகராட்சி இந்த சாலையை விரிவுபடுத்தியுள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இதனை தொடர்ந்து, மாநகராட்சி தரப்பில், லூப் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருவதாகவும், அப்பகுதியில் உள்ள மீனவர்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் 75 மீன் கடைகள், 15 குடிசைகள், 21 பெட்டிக்கடைகள் அகற்றப்பட்டுள்ளதாகவும், புதியதாக மீன் சந்தை அமைக்கும் வரை மீனவர்கள் குடியிருப்பில் இருந்து சாலைக்கு இடையில் உள்ள இடத்தை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் எனவும், போக்குவரத்தை முறைப்படுத்துவதாகவும் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இப்பிரச்சனை குறித்து மனுவாக தாக்கல் செய்ய மாநகராட்சிக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் பாலாஜி அமர்வு உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று மீண்டும், சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சாலையின் மேற்கு பகுதியில் உள்ள நடைபாதையில் தற்காலிகமாக மீன்கடைகள் அமைக்கப்படுவதாகவும், போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் ஒழுங்குபடுத்தப்படும் எனவும், கலங்கரை விளக்கத்தின் பின்புறமும், சீனிவாசபுரத்தின் அருகிலும் வாடிக்கையாளர்கள் வாகனங்களை நிறுத்த இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறி மாநகராட்சி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், சாலையை ஆக்கிரமிப்பதை அனுமதிக்க முடியாது. இந்த விவகாரத்தை அரசியலாக்கவும் கூடாது. போக்குவரத்துக்கு எந்த இடையூறும் இல்லாமல் மீன்கடைகளை ஒழுங்குபடுத்த வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 19-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.