மணிப்பூர் வன்முறையைக் கட்டுப்படுத்தாத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியில் மணிப்பூர் வன்முறையை கட்டுப்படுத்த இயலாத செயலற்ற மாநில பாஜக அரசை கண்டித்து மக்கள் நீதி மையம் கட்சி சார்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் அருணாச்சலம் தலைமையில் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசு மற்றும் மணிப்பூர் அரசுக்கு எதிராக பதாகைகளை ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் மேடையில் பேசிய மக்கள் நீதி மையம் கட்சி பொது செயலாளர் அருணாச்சலம், பாஜக அரசு இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு மாறாக செயல்பட்டு வருகிறது. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று அழகான வரியை கவிஞர் பூங்குன்றனார் சிறப்பாக சொல்லி இருக்கிறார். அதை அனைவரும் மேடையில் பேசுகிறார்களே தவிர அதன் பொருள் யாருக்கும் தெரியவில்லை என நினைக்கிறேன். மணிப்பூர் வன்முறையைக் கட்டுப்படுத்தாத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து சென்னை உள்பட 8 மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
பிரதமர் மோடி ஏன் இன்னும் மணிப்பூர் மக்களை சந்தித்து பேசவில்லை, எதற்காக தயங்கி நிற்கிறார்?. மணிப்பூர் மக்கள் அன்றாட வாழ்க்கையில் இழந்து தவித்து வருகிறார்கள். ஆகவே தயவு செய்து மணிப்பூர் மக்களை சந்தித்து இதற்கான தீர்வுகள் தொடர்பாக பிரதமர் மோடி பேச வேண்டும். அதற்கு முன்னால் மணிப்பூர் அரசை கலைத்து விட்டு செல்ல வேண்டும் என்றும் கூறினார்.
- பி.ஜேம்ஸ் லிசா