மதுரையில் கொரோனா தொற்று அதிகரிப்பால் தாம்பூல தட்டில் வெற்றிலை பாக்குடன் இலவச முகக்கவசங்களை தன்னார்வலர் ஒருவர் வழங்கியுள்ளார்.
கொரானா வைரஸ் தொற்று இரண்டாம் அலை மிகத்தீவிரமாக பரவி வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
மதுரையில் கொரோனாவை கட்டுப்படுத்த பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும், தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகளை மாவட்ட நிர்வாகம் வழங்கி வருகிறது.
மேலும் முக்கவசம் அணியாத நபர்களுக்கு 200ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மதுரை மதிச்சியம் செனாய் நகர் பகுதியைச் சேர்ந்த அசோக்குமார் என்ற தன்னார்வலர் முகக்கவசம் அணியாமல் வெளியே சுற்றும் பொதுமக்களுக்கு நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தாம்பூல தட்டில் வெற்றிலை பாக்கு வைத்து இலவச முகக்கவசங்களை வழங்கி அணிந்து கொள்ள வலியுறுத்தினார்.
மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை நுழைவு வாயில், அதனை ஒட்டிய சாலைகளில் முகக்கவசம் அணியாத பொதுமக்கள், இளைஞர்கள், முதியவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இலவசமாக முகக்கவசங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.







