குடியரசு தலைவர், பிரதமர் படங்களை அரசு அலுவலங்களில் வைக்க கட்டாயப்படுத்தமுடியாது: சென்னை உயர் நீதிமன்றம்

தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் குடியரசு தலைவர், பிரதமர் புகைப்படங்கள் வைப்பது குறித்து சம்பந்தப்பட்ட அரசு அலுவலகங்கள் தான் முடிவெடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு அலுவலகங்களில், மகாத்மா காந்தி,…

தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் குடியரசு தலைவர், பிரதமர் புகைப்படங்கள் வைப்பது குறித்து சம்பந்தப்பட்ட அரசு அலுவலகங்கள் தான் முடிவெடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு அலுவலகங்களில், மகாத்மா காந்தி, நேரு, திருவள்ளுவர், அண்ணா, ராஜாஜி, பெரியார் படங்களுடன், குடியரசு தலைவர் மற்றும் பிரதமரின் படங்களை வைக்க கடந்த 1978-ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

அதன்படி, குடியரசு தலைவர் மற்றும் பிரதமர் படங்களை வைக்க உத்தரவிடக் கோரி, கடலூரைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி ஜெயகுமார், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவை செய்திருந்தார்.அதில், தமிழக அரசு அரசாணை பிறப்பித்தும், பெரும்பாலான அரசு அலுவலகங்களில், குடியரசு தலைவர், பிரதமர் படங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், “தேசிய தலைவர்களின் புகைப்படங்களை அரசு அலுவலகங்களில் வைக்க அனுமதித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டபோதும், இந்த படங்களை வைக்க வேண்டும் என அந்த அரசாணையில் கட்டாயப்படுத்தப்படவில்லை என தெரிவித்தார்.

தலைமை வழக்கறிஞரின் வாதத்தை பதிவு செய்த நீதிபதிகள், தலைவர்களின் புகைப்படங்களை அரசு அலுவலகங்களில் வைக்க வேண்டும் என அரசாணை கட்டாயப்படுத்தாத நிலையில், பிரதமர், குடியரசு தலைவர் படங்களை வைப்பது குறித்து சம்பந்தப்பட்ட அரசு அலுவலகங்கள் தான் முடிவெடுக்க வேண்டும் எனக் கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.