ஊத்துக்குளியில் சானிடைசர் என்ற பெயரில் சட்ட விரோத சாராய விற்பனையில் ஈடுபட்ட ஏழு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் முத்தம்பாளையம் கிராமம் முண்டூர் காவலை தோட்டம் பகுதியில் ஊத்துக்குளி காவல்துறையினர் மற்றும் தாராபுரம் மதுவிலக்கு காவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர் . அப்போது அப்பகுதியில் சானிடைசர் என்ற பெயரில் சட்ட விரோதமாக விற்பனை செய்ய சாராயம் வைத்திருந்தது தெரியவந்தது.
அதன்படி சட்ட விரோத விற்பனையில் ஈடுபட்ட குணசேகரன், விஜய், விக்னேஷ், சதீஷ், ஜெயராஜ், சுலைமான் மற்றும் மனோஜ் ஆகிய ஏழு பேரை காவல்துறையினர் உடனடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1750 லிட்டர் சாராயம், சாராய விற்பனைக்குப் பயன்படுத்திய சரக்கு வாகனம் மற்றும் இரண்டு சொகுசு கார்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் குறித்து தாராபுரம் மதுவிலக்குப் பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
– ஜெனி








