தனியார் நிறுவன நிர்வாகிகளுக்கு மிரட்டல் – திமுக எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க மநீம வலியுறுத்தல்

தனியார் நிறுவன நிர்வாகிகளை மிரட்டும் திமுக எம்எல்ஏ மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து, மக்கள் நீதி மய்யம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: செங்கல்பட்டு…

தனியார் நிறுவன நிர்வாகிகளை மிரட்டும் திமுக எம்எல்ஏ மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, மக்கள் நீதி மய்யம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் அருகே செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்துக்குச் சென்ற திமுக தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா, அந்நிறுவன நிர்வாகிகளை ஆபாசமாகப் பேசுவதுடன், கை கால்களை உடைத்து விடுவதாக மிரட்டும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி, மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.

பொறுப்புமிக்க சட்டப் பேரவை உறுப்பினர், தனியார் நில குத்தகை விவகாரத்தில் பஞ்சாயத்து பேசச் சென்றதும், சம்பந்தப்பட்ட நிறுவனத்தினரை மிரட்டுவதும் ஏற்கத்தக்கதல்ல. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்திருந்தாலும், திமுக எம்எல்ஏ மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மநீம வலியுறுத்துகிறது.

ஆளுங்கட்சியைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளும், கட்சி நிர்வாகிகளும் அத்துமீறி நடந்துகொள்வதும், மிரட்டல், தாக்குதல்களில் ஈடுபடுவதும் அதிகரித்து வருகிறது. இது தமிழக அரசுக்கு அவப்பெயரையே ஏற்படுத்தும். எனவே, இவற்றைத் தடுத்து நிறுத்துவதில் தமிழக முதல்வர் கவனம் செலுத்துவது அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.