முதல் காட்சி முடியும் முன்பே இணையத்தில் வெளியான ’லியோ’: படக்குழு அதிர்ச்சி!

விஜய் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இன்று வெளியான ‘லியோ’ திரைப்படம் முதல் காட்சி முடியும் முன்பே இணையத்தில் வெளியானதால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய்…

விஜய் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இன்று வெளியான ‘லியோ’ திரைப்படம் முதல் காட்சி முடியும் முன்பே இணையத்தில் வெளியானதால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம் லியோ. த்ரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட இந்திய சினிமாவின் நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் பிரமாண்டமாக இத்திரைப்படத்தை தயாரித்துள்ளது.

க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது முதலே பெரும் எதிர்பார்ப்பை சம்பாதித்திருந்த லியோ திரைப்படம்,  இன்று உலகம் முழுவதும் வெளியானது.  தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் வெளியான  ‘லியோ’ திரைப்படம்,  தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் ரசிகர்களை தன்வசம் கட்டிப்போட்டுள்ளது.

இந்தத் திரைப்படத்தை சட்டவிரோதமாக 1,246 இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டுமென அரசு, தனியாரின் இணையதள சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிடக் கோரி பட தயாரிப்பு நிறுவனமான ‘செவன் ஸ்கீா்ன்’ நிறுவனத்தின் இயக்குநா் லலித்குமாா் சாா்பில் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, பட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன், ‘சட்டவிரோதமாக இணையதளங்களில் லியோ படம் வெளியானால் பெருத்த நஷ்டம் ஏற்படும். மேலும், இந்தப் படத்தில் பணியாற்றிய திரை கலைஞர்களின் வாழ்க்கையும் பாதிக்கப்படும்’ என வாதிட்டார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, லியோ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், இணையதள நிறுவனங்கள், சட்டவிரோதமாக இந்தத் திரைப்படம் வெளியாவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த படத்தின் முன்னோட்ட காட்சிகள், நடிகர் விஜய்யின் காட்சிகள் என நேற்று இரவு முதலே 10 விநாடிகள், 15 விநாடிகளுக்கு வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வந்தன. அவ்வாறான காட்சிகளை பகிர்வதை தவிர்க்குமாறு விஜர் ரசிகர்கள் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. இன்றும் தமிழ்நாட்டில் படம் வெளியானது முதலே ஒரு சில காட்சிகளை ஆரவாரத்தில் விஜய் ரசிகர்களே தங்கள் மொபைல்களில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில், எதிர்பாராத விதமாக தமிழ்நாட்டில் முதல் காட்சி முடியும் முன்பே, பைரசி தளங்களில் லியோ திரைப்படம் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். சில பைரசி தளங்கள் மற்றும் சில செயலியில் இப்படத்தை சட்டவிரோதமாக வெளியிட்டுள்ளனர். இது விஜய் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.