காணொலி காட்சி விசாரணையின்போது பெண்ணிடம் ஒழுங்கீனமாக நடந்துகொண்டது தொடர்பான வழக்கில் வழக்கறிஞருக்கு இரண்டு வாரம் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற காணொலி காட்சி விசாரணையின் போது, கேமரா செயல்பாட்டில் இருந்தது தெரியாமல் வழக்கறிஞர் ஒருவர், பெண்ணிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
இது தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த நீதிபதிகள் பி.என் பிரகாஷ், நக்கீரன் அமர்வு, சம்பந்தப்பட்ட வழக்கறிஞர், தொழில் செய்ய தடை விதித்தும், சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.
வழக்கறிஞருக்கு இரண்டு வாரம் சிறை தண்டனையும், 6 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்த நீதிபதிகள், இந்த வழக்கில் ஏற்கனவே 34 நாட்களாக சிறை தண்டனை அனுபவித்து வருவதால், தண்டனையை கழித்துக் கொள்ள உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கில் உடனடியாக நடவடிக்கை எடுத்த சிபிசிஐடி போலீசாருக்கு நீதிபதிகள் பாராட்டு தெரிவித்தனர்.








