’இளவரசே, அதற்குள் விடைபெற முடியாது’-வந்தியத்தேவனை உறுதிப்படுத்திய கார்த்தி

பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியதேவன் கேரக்டரில், தான் நடிப்பதை முதன் முறையாக, நடிகர் கார்த்தி உறுதிப்படுத்தியுள்ளார். வாசகர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்ற கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ வரலாற்று நாவலை சினிமாவாக்கி வருகிறார் மணிரத்னம்.  இதில்…

பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியதேவன் கேரக்டரில், தான் நடிப்பதை முதன் முறையாக, நடிகர் கார்த்தி உறுதிப்படுத்தியுள்ளார்.

வாசகர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்ற கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ வரலாற்று நாவலை சினிமாவாக்கி வருகிறார் மணிரத்னம்.  இதில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உட்பட பலர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கும் இந்தப் படத்துக்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு இப்போது குவாலியரில் நடந்து வருகிறது. படத்தின் இறுதி கட்டத்திற்கு படக்குழு வந்துள்ளது. இதற்கிடையே ’பொன்னியின் செல்வன்’ ஷூட்டிங் முடிந்து நேற்று சென்னைத் திரும்பினார் ஜெயம் ரவி.

அவர், “பொன்னியின் செல்வன் படத்தில், இரண்டு பாகத்திற்கான எனது படப்பிடிப்பை முடித்துவிட்டேன். மணி சாரின் காமெடி சென்சும், என் மீது நம்பிக்கை வைத்ததையும், தனி அக்கறையோடு கவனித்துக் கொண்டதையும் நினைத்துப் பார்க்கிறேன். மீண்டும் உங்க ளுடன் பணிபுரியும் வரை உங்களை மிஸ் பண்ணுகிறேன். இதெல்லாம் என் தாயின் ஆசீர்வாதத்தோடு நடந்தது. இன்று பிறந்த நாள் கொண்டாடும் என் அம்மாவுக்கு வாழ்த்து கள்” என்று கூறியிருந்தார்.

இதையடுத்து, இந்த ட்வீட்டைக் கண்ட நடிகர் கார்த்தி, “இளவரசே (ஜெயம் ரவி) நீங்கள் அதற்குள் விடைபெற்றுக்கொள்ள முடியாது! நீங்கள் சோழ நாட்டிற்கு செய்ய வேண்டிய பணிகள் நிறைய உள்ளது. இன்னும் 6 நாட்களில் வடக்கில் வேலைகளை முடித்துவிட்டு தென் மண்டலம் வந்தடைவோம். – வந்தியத்தேவன் ” என்று ஜாலியாக டிவிட் செய்துள்ளார்.

இதன் மூலம் இந்தப் படத்தில் தனது கேரக்டர் வந்தியதேவன் என்பதை அவர் உறுதி செய்துள்ளார். இதை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகிறார்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.