கடலூர் மத்திய சிறைச்சாலை வளாகத்திற்குள் ரவுடி எண்ணூர் தனசேகரன் அடைத்து வைக்கப்பட்டுள்ள அறைக்குள், 2வது முறையாக செல்போன் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை சிறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இவருக்கு செல்போன் கொடுத்த சிறை அதிகாரி யார் என்பதை சிறைத்துறை தலைவர், டிஜிபி ஆகியோர் விசாரித்து கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சிறை அதிகாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கடலூர் மத்திய சிறையில் கடந்த 8ம் தேதி பிரபல ரவுடி எண்ணூர் தனசேகரன் அறையில் இருந்து, செல்போன் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்திற்கு பதிலடியாக சப்ஜெயிலர் மணிகண்டனை, குடும்பத்தினரோடு வீட்டிற்குள் பெட்ரோல் ஊற்றி தீவைத்து கொலை செய்ய சதிச்செயல் நடந்த நிலையில் மீண்டும், அதே அறையில் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் சிறைச்சாலைக்குள் சர்வசாதாரணமாக செல்போன்களும், போதை பொருட்களும் நடமாட்டம் இருப்பதும், சிறைத்துறை அதிகாரிகள் துணையோடு இந்த சம்பவங்கள் நடப்பது மீண்டும் உறுதியாகியுள்ளது.கடலூர் மத்திய சிறை அருகே உள்ள காவலர்கள் குடியிருப்பில் வசித்து வரும் சப்ஜெயிலர் மணிகண்டனின் வீட்டிற்கு கடந்த 28ம் தேதி அதிகாலை வந்த மர்ம நபர்கள் 3 பேர், அவர் வீட்டின் சமையல் அறையின் ஜன்னல் வழியாக பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில், அறை முழுவதும் பற்றி எரிந்தது.அதிர்ஷ்டவசமாக அவர்கள் உயிர் தப்பினர்.இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். கடலூர் டிஎஸ்பி கரிகால பாரிசங்கர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. கடந்த மாதம் 8ம் தேதி உதவி சிறை அலுவலர் மணிகண்டன் மற்றும் போலீசார் கடலூர் மத்திய சிறையில் சோதனை மேற்கொண்டனர்.அப்போது எண்ணூரை சேர்ந்த ரவுடி எண்ணூர் தனசேகரன் என்பவர் அறையிலிருந்து ஒரு செல்போன், ஒரு சார்ஜர் மற்றும் 2 பேட்டரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அப்போது தனசேகரனுக்கும் உதவி சிறை அலுவலர் மணிகண்டனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மணிகண்டன் இது குறித்து கடலூர் முதுநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் தனசேகர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த மோதல் காரணமாக மணிகண்டனை கொலை செய்ய ரவுடி தனசேகர் திட்டம் தீட்டியிருக்கலாம் என்கிற அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கடலூர் மத்திய சிறை அருகில் உள்ள செல்போன் டவரில் பதிவாகியுள்ள எண்களின் பட்டியலை எடுத்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கடலூர் மத்திய சிறையில் வார்டனாக உள்ள செந்தில்குமாரின் தொலைபேசி எண் அந்த பகுதியில் பயன்படுத்துவதை கண்டுபிடிக்கப்பட்டது. அவரது செல்போனை ஆய்வு செய்தனர்.கடந்த மாதம் 8ம் தேதி எண்ணூர் தனசேகரனின் போன் பறிமுதல் செய்யப்பட்ட செய்தியை, எண்ணூர் தனசேகரன் மனைவிக்கு சிறை வார்டன் செந்தில்குமார் போன் மூலம் தகவல் கூறியதும் தெரியவந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது செந்தில்குமார், சப் ஜெயிலர் மணிகண்டன் வீட்டுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்தில் உடந்தையாக இருந்ததும், எண்ணூர் சிறை கைதி தனசேகரனுக்கு சட்ட விரோதமாக பல்வேறு உதவிகளை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது.முன்னதாக செந்தில்குமார், சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டது குறித்து மணிகண்டன், உயர் அதிகாரிகளிடம் புகார் செய்து அவருக்கு மெமோ வழங்கப்பட்டது.. இதனால் சப் ஜெயிலர் மணிகண்டனை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்று கைதி தனசேகருடன் சேர்ந்து செந்தில்குமார் திட்டம் திட்டியுள்ளார். தனசேகரன் மூலம் சென்னையை சேர்ந்த தினேஷ் என்பவர் அறிமுகமாகி உள்ளார். அவர் மூலம் சப் ஜெயிலர் மணிகண்டனின் வீட்டிற்கு தீ வைக்க செந்தில்குமார் திட்டம் தீட்டியது தெரியவந்தது.அதன் படி 7க்கும் மேற்பட்டோருடன் சேர்ந்து உதவி ஜெயிலர் வீட்டிற்கு தீ வைத்தது தெரியவந்துள்ளது. தினேஷ் மற்றும் வார்டன் செந்தில்குமார் ஆகிய இரண்டு பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 6 பேரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் திருச்சி அருகே உள்ள திருவெறும்பூரில் பதுங்கி இருந்த கைதி தனசேகரனின் தம்பியான 23 வயதான மதிவாணன், 26 வயதான மௌலிதரன் ஆகிய 2 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இதேபோல திருவள்ளூர் மாவட்டம் கத்திவாக்கத்தை சேர்ந்த மணவாளன், கார்த்தி மற்றும் இளந்தமிழன் ஆகியோர் பட்டுகோட்டை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சரணடைந்தனர்.சிறைச்சாலையில் பலத்த பாதுகாப்புடன் அடைத்துவைக்கப்பட்டுள்ள ரௌடி எண்ணூர் தனசேகரன் அறையில் மீண்டும் செல்போன் நடமாட்டம் இருப்பதாக சிறைத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் சிறைத்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார், காவலர்கள் விநாயகம் மற்றும் ராஜதுரை தலாமில் சிறைக்காவலர்கள் எண்ணூர் தனசேகரன் அறைக்குள் அதிரடியாக சோதனை நடத்தினர். இதில் அவரது அறையில் செல்போன், சார்ஜர் மற்றும் சிம்கார்டுகள் ஆகியவை கைப்பற்றப்பட்டது. இதுகுறித்து முத்துநகர் போலீசில் சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் தனசேகரன் மீது வழக்கு பதிவு செய்தனர்.உதவி ஜெயிலர் மணிகண்டன் வீட்டில் பெட்ரோல் ஊற்றி தீவைத்து கொலை செய்ய முயற்சி நடந்த சம்பவம் தமிழக சிறை அதிகாரிகளையே பதட்டத்துக்கு ஆளாகியுள்ள நிலையில், மீண்டும் ரவுடி அறைக்குள் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறை அதிகாரிகளின் உதவி இல்லாமல் இந்த சம்பவம் நடந்திருக்க முடியாது என்பதே தற்போது எழுந்துள்ள சந்தேகம்.
இது சிறைத்துறை தலைவரும், டிஜிபியுமான சுனில்குமார், சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோர், உயர் அதிகாரிகளை சிறைக்கு அனுப்பி ரௌடிகளுக்கும், சமூக விரோதிகளும் துணைபோகும் சிறை அதிகாரிகளை கண்டுபிடித்து கலையெடுப்பதோடு, சிறைச்சாலைகளில் பல ஆண்டுகளாக ஒரே இடத்தில பணியாற்றும் சிறை அதிகாரிகள், சிறை காவலர்களை வேறு சிறைகளுக்கு மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. முறைகேட்டை கண்டுபிடிக்க ஒவொரு சிறைக்குள்ளும் அமைக்கப்பட்டுள்ள சிறைத்துறை விஜிலென்ஸ் அதிகாரிகளும் இந்த முறைகேடுகளுக்கு உடந்தையாக இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தள்ளது.
-சிவ செல்லையா