இந்திய கடற்படையிடம் இருந்த மீனவர்கள், நாகை துறைமுகம் கொண்டு வரப்பட்ட நிலையில், தங்களை இரும்பு பைப்பால் தாக்கியதாகவும், 18 மணி நேரம் உணவு, குடிநீர் வழங்காமல் கொடுமைப்படுத்தியதாகவும் குற்றம்சாட்டினர்.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் மேடு மீனவர் கிராமத்தை சேர்ந்த செல்வம் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மயிலாடுதுறை மாவட்டம் வானகிரி கிராமத்தைச் சேர்ந்த வீரவேல், செல்வகுமார், செல்லத்துரை உள்ளிட்ட பத்து மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். கடந்த 15 ஆம் தேதி காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் நேற்று அதிகாலை இந்திய எல்லைப் பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது அந்த பகுதியில் இந்திய கடற்படை கப்பலான ஐ என் எஸ் பங்காரம் (INS BANGARAM) பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். இந்திய கடற்படை கப்பலை கண்ட மீனவர்கள் இலங்கை கடற்படை கப்பல் என தவறுதலாக நினைத்து அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக அந்தப் பகுதியில் இருந்து விசைப்படகை வேகமாக செலுத்தினர். இதனைக் கண்ட இந்திய கடற்படையினர் மீனவர்களை எச்சரித்துள்ளனர். ஆனால் மீனவர்கள் படகு நிறுத்தாமல் சென்று கொண்டிருந்ததால் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.
இதில் வீரவேல் என்பவர் படுகாயமடைந்தார். பின்னர் அவர் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். மேலும் விசைப்படகை மண்டபம் கடற்படை முகாமில் வைத்து விசாரணை நடத்திய அதிகாரிகள், அதனைத் நாகப்பட்டினம் துறைமுகத்தில் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரிடம் மீனவர்களின் படகுகளை நேற்று நள்ளிரவு ஒப்படைத்தனர். அதில் இருந்து மீதமுள்ள 9 மீனவர்களும் நாகை துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
இதனிடையே, தங்களை இந்திய கடற்படை அதிகாரிகள் கைகளை கட்டி, இரும்பு பைபால் தாக்கியதாகவும், 18 மணி நேரத்திற்கு மேலாக உணவு, குடிநீர் வழங்காமல் கொடுமைப்படுத்தியதாகவும் வேதனை தெரிவித்தனர். எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு அவர்கள் கோரிக்க விடுத்துள்ளனர்.