வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் என்னவிதமான மாற்றங்களை மேற்கொண்டால் காங்கிரசின் வெற்றி உறுதி செய்யப்படும் என சிந்திப்பதற்காக, சிந்தனை அமர்வு என்ற தலைப்பில் ராஜஸ்தானில் அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி தலைமையில் கூட்டம் நடைபெற்றது. அதில் பாஜகவிற்கு எதிராக ஒரு வலுவான அணியை உருவாக்க வேண்டும் என்ற கருத்து முன் வைக்கப்பட்டது. இந்தநிலையில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜியை பிரதமர் வேட்பாளராக அறிவித்து, அக்கட்சி சமூக வலைதளங்களில் அதிரடியாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது.
’இந்தியாவின் தேவை மம்தா அக்காவே’ என்ற பொருள்படும்படி ’India Wants Mamata Di’ என்ற புதிய இணையதளமும், ட்விட்டர் கணக்கும் உருவாக்கப்பட்டுள்ளன. மேற்கு வங்கத்தில் இருந்து ஒரு பிரதமர் என்ற கோஷம் முன்வைக்கப்படுகிறது. கடந்த 40 ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் மம்தா செய்த பல்வேறு சாதனைகளை இந்த இணையதளம் மூலம் நாடு முழுவதும் கொண்டு செல்ல அக்கட்சி முடிவு செய்துள்ளது. பாஜகவிற்கு எதிராக உள்ள கட்சிகளிடையே பெரியளவில் ஒரு ஒற்றுமை இல்லாத நிலையில், மம்தாவின் இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரங்களில் பெரிய அதிர்வு அலையை ஏற்படுத்தியுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதன்மூலம் பாஜகவுக்கு மட்டுமல்ல, காங்கிரஸ் கட்சிக்கும் மம்தா ஒரு முக்கிய கருத்தை முன் வைக்கிறார். அதாவது மாநில கட்சியில் இருந்து பிரதமர் வேட்பாளரை முன் நிறுத்த வேண்டும் என்பதே என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். மேலும், வேறு எந்த மாநில கட்சித்தலைவர்களும் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை நேரடியாக கூறாதநிலையில், தனது விருப்பத்தை அதிரடியாகவே மம்தா வெளிப்படுத்தியுள்ளதாகவே தெரிகிறது. காங்கிரஸ் கட்சியின் சிந்தனை அமர்வு நடைபெற்ற காலகட்டத்தில், இந்த அறிவிப்பினை வெளியிடுவது மூலம், காங்கிரஸ் கட்சிக்கு மம்தா மறைமுக அழுத்தம் கொடுப்பதாகவே தெரிகிறது.
இந்த அறிவிப்பு பாஜகவிற்கு எதிராக உள்ள அணியில் பிளவை ஏற்படுத்தும் என்றே தெரிகிறது. பாஜகவிற்கு எதிராக களமாடும் ஒரு மூத்த தலைவர், இப்படியா அவசரம் காட்டுவது, இது பாஜகவிற்கே பலன் கொடுக்கும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். பிரதமர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்கும் முன்னர் அவர் வலுவான கூட்டணி ஒன்றினை தேசிய அளவில் உருவாக்கியிருக்க வேண்டும். அதன் பின்னர் பிரதமர் யார் என்பது குறித்து ஒரு மித்த கருத்தை உருவாக்கியிருக்கலாம். அப்படி செய்யாமல், தனக்குதானே பிரதமர் வேட்பாளர் என அவர் அறிவித்துக்கொண்டதன் மூலம் அவர் பாஜகவின் B டீமோ என்ற சந்தேகம் எழுவது இயல்பே என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.