காவல்துறை அதிகாரிகளை ரவுடிகள் தாக்கினால், சூழ்நிலைக்கு ஏற்றார்போல் சுட்டு பிடிப்பதற்கும் காவலர்கள் தயங்க மாட்டார்கள் என டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல்துறை அதிகாரிகளிடம் கலந்தாய்வு கூட்டத்தில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கலந்து கொண்டு ஆய்வு நடத்தினார். அதனைத் தொடர்ந்து சிறப்பாகப் பணியாற்றிய காவல் துறையினருக்குப் பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “காவல்துறை அதிகாரிகளை ரவுடிகள்
தாக்கினால் சூழ்நிலைக்கு ஏற்றார் போல் சுட்டுப் பிடிப்பதற்கும் காவலர்கள் தயங்க
மாட்டார்கள். தமிழகம் முழுவதும் கடந்த மூன்று மாதத்தில் ரூ.23 கோடி மதிப்பிலான நகைகள் மற்றும் வாகனங்கள் மீட்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் ரூ.46 லட்சம் மதிப்பிலான திருடுபோன தங்க நகைகள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது பாராட்டுக்குரியது.
இதையும் படியுங்கள் : குழந்தைகளை ஊக்குவிக்க புதுமுயற்சி – பட்டமளிப்பு விழா நடத்திய பள்ளி நிர்வாகம்
தமிழகத்தில் வட மாநிலத்தவர்கள் தாக்கப்படுவது போல் சமூக ஊடகங்களில் வீடியோ
வெளியிட்ட முகமது ரஷ்ஃபி என்பவர் கைது செய்யப்பட்டு, அவர்மீது குற்ற வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. அதேபோல் இதுபோன்ற தவறான வீடியோ செய்திகளை வெளியிடும் பத்திரிகைகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
காவல் நிலையங்களில் விசாரணைக் கைதிகள் துன்புறுத்தப்படும் நிகழ்வுகள் எதுவும் இந்த ஆண்டு நடைபெறவில்லை. சென்ற ஆண்டு நான்கு நிகழ்வுகளும், அதற்கு முன்னதாக 17 நிகழ்வுகளும் நடந்துள்ளது. தற்போது காவலர்களுக்கு பொதுமக்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் விசாரணையில் அறிவியல் பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதால், அதுபோன்ற சம்பவங்கள் இல்லை” என்று தெரிவித்தார்.
– ரெ. வீரம்மாதேவி