“வயநாட்டில் ராகுல் காந்தி இல்லாத வெறுமையை உணர விடமாட்டேன்” – பிரியங்கா காந்தி பேட்டி!

வயநாட்டில் ராகுல் காந்தி இல்லாத வெறுமையை உணர விடமாட்டேன் என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவால் தனிப்பெரும்பான்மை பெற முடியாத நிலையில், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சி…

வயநாட்டில் ராகுல் காந்தி இல்லாத வெறுமையை உணர விடமாட்டேன் என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவால் தனிப்பெரும்பான்மை பெற முடியாத நிலையில், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைத்தது. அதேநேரம் மறுபுறம் காங்கிரஸ் கட்சி இந்த முறை மொத்தம் 99 தொகுதிகளில் வென்றது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த முறை வென்ற கேரள மாநிலம் வயநாட்டு மற்றும் உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியிலும் போட்டியிட்டார்.

இரண்டு தொகுதிகளிலும் ராகுல் காந்தி மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். விதிகளின்படி, ஒரு நபர் இரண்டு இடங்களில் தேர்தலில் போட்டியிடலாம். ஆனால் இரண்டிலும் வெற்றி பெற்றுவிட்டால் இரண்டில் எதாவது ஒரு பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். ஒருவரால் ஒரே நேரத்தில் இரு பதவியில் இருக்க முடியாது. ஒரு தொகுதியை மட்டுமே ஒரு நேரத்தில் பிரதிநிதித்துவப்படுத்த முடியும் என்பதே இதன் விதியாகும்.

இந்நிலையில், இன்றுடன் முடிவெடுப்பதற்கான இறுதி நாள் என்பதால் நேற்று (ஜூன் 17) காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் அவரது இல்லத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி ராஜினாமா செய்வதாகவும், ரேபரேலியில் எம்பியாக தொடர்வதாகவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும் வயநாட்டில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த பிரியங்கா காந்தி, “வயநாட்டை பிரதிநிதித்துவப்படுத்துவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். வயநாட்டில் ராகுல் காந்தி இல்லாத வெறுமையை உணர விடமாட்டேன். நான் கடினமாக உழைத்து, அனைவரையும் மகிழ்வித்து, நல்ல பிரதிநிதியாக இருக்க என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன். ரேபரேலி மற்றும் அமேதியுடன் எனக்கு மிகவும் பழைய உறவு உள்ளது. அதை உடைக்க முடியாது. ரேபரேலியில் உள்ள என் சகோதரனுக்கும் உதவுவேன். நாங்கள் இருவரும் ரேபரேலி மற்றும் வயநாட்டில் இருப்போம்”

இவ்வாறு தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.