மத நல்லிணத்திற்கு எப்போதும் முன்னோடியாக திகழ்வது தமிழ்நாடு. அந்த வகையில், கமுதி அருகே அம்மன் கோயில் திருவிழாவில், இந்து – முஸ்லீம்கள் கூட்டு வழிபாடு நடத்தினர்.
மத நல்லிணக்கத்திற்கு உதாரணமாக திகழும் மாநிலங்களில் ஒன்று தமிழ்நாடு. இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர்கள் என அனைத்து மதத்தினரும் எந்த ஒரு பிணக்கும் இன்றி ஒற்றுமையாக வாழும் மாநிலம் தான் தமிழ்நாடு. அதற்கு கட்டியம் கூறும் வகையில் அமைந்துள்ளது ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பிள்ளையார் குளம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அரைக்காசு அம்மன் கோவில்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த கோயிலில் மூன்று தலைமுறை காலத்திற்கு மேலாக நடைபெறும் சமூக ஒற்றுமை மத நல்லிணக்க வழிபாட்டு திருவிழா புரட்டாசி மாதத்தில் நடத்தப்பட்டு வருகிறது. அதில் பிள்ளையார்குளம், சாயல்குடி,கமுதி, கடலாடி உள்ளிட்ட சுற்று வட்டார பல்வேறு பகுதிகளில் இருந்து இந்து, முஸ்லீம் மதத்தை சேர்ந்த ஆண்களும் பெண்களும் ஆர்வமுடன் பங்கேற்று இறைவனை தங்கள் முறைப்படி வழிபட்டனர். இந்துக்களும், முஸ்லீம்களும் ஒன்றாக அமர்ந்து இறைவனை வேண்டும் காட்சியையும் இங்கு தினமும் காண முடியும்.
கூட்டாக வழிபட்ட இந்து, முஸ்லீம்கள்
இந்து மதத்தை சேர்ந்த பக்தர்கள் தங்களது மத வழிபாட்டு முறைகளின் படி நெய்விளக்கு, தேங்காய்,விபூதி, ஊதுபத்தி ஆகியவற்றை படையலிட்டு வழிபட்டனர். முஸ்லீம் மதத்தினர் சக்கரை, மல்லிகை பூ, பூந்தி உள்ளிட்ட பூஜை பொருட்களுடன் இறைவனை மனமுருகி வழிபட்டுச் செல்கின்ற காட்சியைக் காண முடிகிறது. இரு மதத்தினரும் ஒற்றுமையாக சிறப்பு பூஜைகளையும் செய்தனர். ஒவ்வொரு ஆண்டும் காலங்காலமாக இந்து முஸ்லீம்கள் இணைந்து ஆண்டு தோறும் ஒற்றுமையாக இந்த திருவிழாவை நடத்தி வருகின்றனர்.
சமபந்தி கறிவிருந்து
இந்த ஆண்டு திருவிழாவை முன்னிட்டு, ஆடு மற்றும் 101 கோழிகளை பலியிட்டு இந்து முஸ்லீம் மதத்தினர் கூட்டு வழிபாட்டில் ஈடுபட்டனர். பின்னர் விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் கறி விருந்து பரிமாறப்பட்டது. இதில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று விருந்து சாப்பிட்டு சென்றனர். அப்போது இதில் பங்கேற்றவர்கள் இது தான் தமிழ்நாடு மாடல் என்றும், மத நல்லிணக்கமும், ஒற்றுமையும் தொடரும் என்றும் தெரிவித்தனர். சமூக ஒற்றுமையை ஏற்படுத்தும் வகையில் பிள்ளையார்குளம் கிராமத்தில் அரைக்காசு அம்மன் கோவில் திருவிழா ஆண்டு தோறும் நடைபெற்று வருவது குறிப்பிட்டதக்கது
இந்த செய்தியை வீடியோவாக காண – https://www.youtube.com/watch?v=S2kwSQeAgnY
-வெற்றிநிலா