புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலில் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின வகுப்பினருக்கு உரிய வகையில் சுழற்சி முறை இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என கூறி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தேர்தல் அறிவிப்பை திரும்பப் பெற மாநில தேர்தல் ஆணையத்திற்கு அனுமதி அளித்தவுடன் 5 நாட்களில் புதிய தேர்தல் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று கடந்த 5ஆம் தேதி உத்தரவிட்டது.
உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை சுட்டிக்காட்டி, உள்ளாட்சி தேர்தலில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 33.5 சதவீதமும், பழங்குடியினருக்கு 0.5 சதவீதமும் ஒதுக்கீடு வழங்கி 2019ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணையை திரும்பப் பெற்று புதுச்சேரி அரசு கடந்த 8ஆம் தேதி அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை எதிர்த்து புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவரும் திமுக அமைப்புச் செயலாளருமான சிவா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதில், மத்தியில் உள்ள ஆளுங்கட்சிக்கு சாதகமாக இட ஒதுக்கீடு அறிவிப்பாணைகள் திரும்பப் பெற்றுள்ளதாக குற்றம் சாட்டிய மனுதாரர், இதுசம்பந்தமான அரசாணைகளுக்குத் தடை விதிக்க வேண்டும் எனவும், கடந்த 8-ம் தேதி வெளியிடப்பட்ட அட்டவணையின் அடிப்படையில், உள்ளாட்சித் தேர்தல் நடத்தத் தடை விதிக்க வேண்டும் எனவும், பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு வழங்கி, தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.
இந்த மனுவானது நீதிபதிகள் மகாதேவன் மற்றும் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
இதில் இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள், இட ஒதுக்கீட்டில் உள்ள குளறுபடிகளைச் சரிசெய்ய அனுமதியளித்த நிலையில், இட ஒதுக்கீட்டைத் திரும்பப் பெற்றது ஏன் என, மாநிலத் தேர்தல் ஆணையத்துக்குக் கேள்வி எழுப்பினர்.
மேலும், அரசியலமைப்புச் சட்ட விதிகளைப் பின்பற்றவில்லை எனக் கூறி, தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க உத்தரவிட்டனர்.
மேலும், மனுவுக்கு முழுமையான விவரங்களுடன் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபர் 21-ம் தேதிக்குத் தள்ளிவைத்த நீதிபதிகள், வழக்கு விசாரணையைத் தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றிப் பரிந்துரைத்தனர்.








