சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக,…

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

பல இடங்களில் மழை நீருடன் கழிவுநீரும் கலந்து வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதால், மக்களிடையே நோய் தொற்று அச்சம் ஏற்பட்டுள்ளது. சாலைகளில் தேங்கியுள்ள தண்ணீரை உடனுக்குடன் அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதேபோல, மயிலாடுதுறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான சீர்காழி குத்தாலம், தரங்கம்பாடி, பூம்புகார், கொள்ளிடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்தத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், மயிலாடுதுறை மற்றும் சீர்காழி ஆகிய நகரப்பகுதிகளில் உள்ள சாலைகளில் குளம் போல் மழைநீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர். மழை நீடிப்பதால், வயல்வெளிகளில் தண்ணீர் சூழ வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.