சசிகலாவை அதிமுகவில் இணைப்பது குறித்து தலைவர்களோ, தொண்டர்களோ நினைக்கவில்லை என அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரியில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பமனு விநியோகத்தை தொடங்கி வைத்தபின், கே.பி. முனுசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், முந்தைய ஆட்சியில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக பெறப்பட்ட நிதியில் முறைகேடு நடந்திருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு முந்தைய அதிமுக ஆட்சியில், தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் பல்வேறு விருதுகளை பெற்றதாகவும், இந்தியாவில் முதன்மை மாநிலம் என்ற விருதை பெற்றதாகவும் தெரிவித்தார்.
தற்போதைய ஆட்சியில், அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இணக்கமான ஒத்துழைப்பு இல்லாததால் மழை நிவாரண பணிகளை மேற்கொள்ள முடியவில்லை என அவர் குற்றம்சாட்டினார்.
சசிகலா குறித்த கேள்விக்கு சசிகலாவை, அதிமுகவில் இணைப்பது குறித்து தலைவர்களோ தொண்டர்களோ நினைக்கவில்லை என்றும், ஊடகங்கள்தான் அதனை நினைத்துக் கொண்டிருப்பதாகவும் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.








