நெய்வேலி என் எல் சி சுரங்கம் அமைக்க கையகப்படுத்தும் நிலங்களை அரசு விட்டுக் கொடுக்க கூடாது என அதிமுக எம்எல்ஏ அருண்மொழித்தேவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சமூக நலத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று பேசிய அதிமுக உறுப்பினர் அருண்மொழித்தேவன், வேளாண்நிலங்களை பாதுகாக்க சட்டம் கொண்டுவந்த ஒரே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான் என பேசினார். என் எல் சி விவகாரத்தில் போராடும் மக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் விவசாயிகளை அழைத்து அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் கடனை வட்டியில்லாமல் வழங்க வேண்டும் எனவும், தமிழகம் முழுவதும் கட்டணமில்லாமல் மாற்றுத்திறனாளிகள் பயணிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
நியாயவிலைக்கடைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் விலையில்லாமல் வழங்க வேண்டும் எனவும், சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களை அரசு ஊழியர்களாக நியமிக்க வேண்டும் எனவும் அருண்மொழித்தேவன் பேசினார்.
மேலும் மாற்றுத்திறனாளிகளுக்காக கொண்டுவரப்பட்ட ரைட்ஸ் திட்டத்தின் கீழ் எந்த மாற்றுத்திறனாளிகளும் பயன்பெறவில்லை என்பதால் அது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட அனிதாவுக்கு ஒரு நீதி கடலூரில் தற்கொலை செய்து கொண்ட நிஷாவுக்கு ஒரு நீதியா என அதிமுக உறுப்பினர் அருண்மொழிதேவன் கேள்வி எழுப்பியதால் சட்டப்பேரவையில் பரபரப்பு ஏற்பட்டது.
- பி.ஜேம்ஸ் லிசா








