“40,000 ஒப்பந்த ஊழியர்களுக்கு உடனடியாக ஏப்ரல் மாத சம்பளம் வழங்கிடுக” – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சுகாதார நிலையங்களில் ஒப்பந்த ஊழியர்களுக்கு ஏப்ரல் மாத சம்பளம் வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் பெ.சண்முகம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழ்நாடு முழுவதும் தேசிய சுகாதார குழுமத்தின் திட்டங்களின் (என்.ஹெச்.எம்.) கீழ், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் மருத்துவர், செவிலியர், ஆய்வக நுட்பனர்கள், மருந்தாளுனர்கள், மருத்துவமனை பணியாளர்கள், கணினி இயக்குபவர்கள் என சுமார் 40,000 ஊழியர்கள் ஒப்பந்த முறையில் பணி செய்து வருகின்றனர். அவர்களுக்கு ஏப்ரல் மாத ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை. இந்த ஊதிய தாமதம், குறைந்த ஊதியத்தில் பணி செய்யும் இந்த ஊழியர்களையும், அவர்களின் குடும்பத்தினரையும் வெகுவாக பாதித்துள்ளது.

எனவே, குறைந்த ஊதியத்தில் வாழும் அந்தக் குடும்பங்கள் எதிர்கொள்ளும் நெருக்கடியை கருத்தில் கொண்டு அவர்களுக்கான ஏப்ரல் மாத ஊதியத்தை உடனடியாக வழங்கிட தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.