கரூர் பேருந்து நிலையத்தில் தொடர் திருட்டு; பயணிகள் அச்சம்!

கரூர் பேருந்து நிலையத்தில் பயணிகளிடமிருந்து லேப்டாப், பணம் உள்ளிட்டவை அடுத்தடுத்து திருட்டு போனதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். திருப்பூரிலிருந்து திருச்சி நோக்கி செல்லும் அரசுப் பேருந்தில் மணிகண்டன் என்பவர் குடும்பத்துடன் பயணம் செய்து வந்த நிலையில்,…

கரூர் பேருந்து நிலையத்தில் பயணிகளிடமிருந்து லேப்டாப், பணம் உள்ளிட்டவை அடுத்தடுத்து திருட்டு போனதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

திருப்பூரிலிருந்து திருச்சி நோக்கி செல்லும் அரசுப் பேருந்தில் மணிகண்டன் என்பவர் குடும்பத்துடன் பயணம் செய்து வந்த நிலையில், கரூர் பேருந்து நிலையத்தில் டீ குடிக்க பணம் எடுக்க பேக்கை பார்த்த போது அவை மாயமாகி இருந்துள்ளது. அந்த இரண்டு பேக்குகளில் சுமார் 3000 ரூபாய் பணம், செல்போன் சார்ஜர், பவர் பேங்க், துணிகள், ஏடி.எம் கார்டுகள் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து அவர்கள் பேருந்தில் இருந்து கீழே இறங்கிய  கூச்சலிட்டுள்ளனர்.

இதே போன்று, மதுரையை சேர்ந்த சுபாஷினி என்பவர் கரூரில் உள்ள தாய் வீட்டிற்கு வந்து விட்டு மதுரைக்கு செல்வதற்காக தனது மகனுடன், லேப்டாப் பேக், மற்றொரு பேக்கில் துணிகளையும் எடுத்துக் கொண்டு மதுரை பேருந்தில் ஏறி இருக்கையில் அமர்ந்துள்ளனா். அப்போது நடத்துனர் டிக்கெட் எடுக்க கூறிய நிலையில், பணம் எடுக்க முயன்ற போது 2 பேக்குகளும் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்து, பேருந்தை விட்டு கீழே இறங்கி என்ன  செய்வதறியாமல் நின்றுள்ளனர். பின்னா் உறவினர்களை வரவழைத்து மீண்டும் தாய் வீட்டிற்கே சென்று விட்டார்.

மேலும் பேருந்து ஏற வந்த மற்றொரு இளைஞரின் லேப்டாப் பேக்கும் திருடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 3 குடும்பத்தினரும் போலீசாருக்கு தகவல் கொடுத்த நிலையில், அங்கு வந்த போலீசார் அவர்களிடம் காவல் நிலையம் வந்து புகார் அளித்து செல்லும்படி அறிவுறுத்திச் சென்றனர்.  ஆனால், அவர்கள் புகார் அளிக்காமல் திரும்பிச் சென்றனர்.

—-ரூபி.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.