குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கும் தேநீர் விருந்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புறக்கணித்துள்ளது.
குடியரசு தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த விருந்தை பல்வேறு அரசியல் கட்சிகள் புறக்கணித்து வருகின்றன. அந்த வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது : “குடியரசு தினத்தையொட்டி தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்திற்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். அதில் சி.பி.ஐ(எம்) பங்கேற்காது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
தமிழ்நாடு என்ற பெயரையே சர்ச்சை ஆக்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி, அதைத் தொடர்ந்து அலையலையாக எழுந்த எதிர்ப்பிற்கு பின் தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளார். இருப்பினும், சட்டமன்றத்தில் இருந்து பாதியில் வெளிநடப்பு செய்த வரலாற்று தவறுக்காக, மாநில மக்களிடம் வருத்தம் தெரிவிக்கவோ, மன்னிப்பு கேட்கவோ இல்லை. தமிழ்நாடு சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட 21 மசோதாக்களை பல மாதங்களாக கிடப்பில் போட்டு, அரசின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை கொடுத்து வருகிறார்.
வாக்களித்த மக்களை அவமதிக்கிற இந்த ஆளுநர் வெளியேற்றப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னணியில் போராடி வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பது தான் தமிழ்நாட்டு மக்களின் உணர்வாகும். எனவே, சி.பி.ஐ(எம்) சார்பில் இந்த தேநீர் விருந்தில் பங்கேற்கும் கேள்வியே எழவில்லை”. இவ்வாறு தனது அறிக்கையில் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.