இருசக்கர வாகனத்தை பைக் டாக்ஸியாக பயன்படுத்துவதை அரசு ஏற்றுக்கொள்ளவில்லை – அமைச்சர் சிவசங்கர்

இருசக்கர வாகனத்தை பைக் டாக்ஸியாக பயன்படுத்துவதை தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொள்ளவில்லை என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். கோவை சாய்பாபா காலனி மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து…

இருசக்கர வாகனத்தை பைக் டாக்ஸியாக பயன்படுத்துவதை தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொள்ளவில்லை என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

கோவை சாய்பாபா காலனி மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு மற்றும் விருப்ப ஓய்வு பெற்றவர்கள் மற்றும் பணியின்போது இயற்கை எய்திய பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பண பலன்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் ஓய்வு பெற்ற பணியாளர்கள் 353 பேர், விருப்ப ஓய்வு பெற்ற 68 பணியாளர்கள், இயற்கை எய்திய 53 பணியாளர்களின் வாரிசுதாரர்கள் என மொத்தம் 518 பணியாளர்களுக்கு ரூ.145.58 கோடி மதிப்பிலான பணபலன்களை வழங்கினர்.

இதனை தொடர்ந்து கோவை மாவட்டத்தில் இயங்கும் பேருந்துகளில் முதல்கட்டமாக 65 பேருந்துகளுக்கு புவிசார் நவீன தானியங்கி அதாவது ஜி.பி.எஸ். கருவி மூலம் பஸ் நிறுத்தம் ஒலி அறிவிப்பு திட்டத்தை தொடங்கி வைத்தனர்.

பின்னர் கோவை மண்டலத்தில் 3 பணிமனைகள், ஈரோடு மண்டலத்தில் 3 பணிமனைகள், திருப்பூர் மண்டலத்தில 1 பணிமனை என மொத்தம் 7 பணிமனைகளில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் தங்குவதற்கு குளிர்சாத வசதியுடன் கூடிய ஓய்வு அறைகளையும் அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.

இதனை தொடர்ந்து போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் அனைத்து ஓட்டுனர்களுக்கு கையேடு வழங்கப்பட்டது.

இதனையடுத்து, செய்தியாளர்களை சந்தித்து பேசிய போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர், போக்குவரத்து துறையில் 2 ஆண்டுகளுக்கான எந்த பலன்களையும் வழங்கவில்லை. அவர்கள் வழங்காமல் விட்டு சென்ற பணப்பலன்களை தி.மு.க. அரசு பொறுப்பேற்றதும் அதற்கு என நிதி ஒதுக்கி, தற்போது பணப்பலன்கள் வழங்கி உள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் புதிய ஓட்டுனர்கள், நடத்துனர்கள் பணிக்கு எடுக்கப்படவில்லை. தற்போது அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக கும்பகோணம் போக்குவரத்து கழகத்தில் பணி நியமனம் நடைபெற உள்ளது.

அதனை தொடர்ந்து பிற பணிமனைகளிலும் பணி நியமனம் நடைபெறும். தமிழக முதலமைச்சர் 2 ஆயிரம் பஸ்களை வாங்குவதற்கு மாநில அரசின் நிதியை ஒதுக்கி உள்ளார். இதற்கான டெண்டர் நடவடிக்கைகள் தொடங்கி உள்ளது. இதுதவிர ஜெர்மன் வங்கி நிதி உதவியுடன் 2,400 பஸ்கள் வாங்குவதற்கான பணியும் தொடங்கி உள்ளது. 6 மாத காலத்துக்குள் புதிய பஸ்கள் நடைமுறைக்கு வந்து விடும். பேருந்து கட்டணத்தை உயர்த்தாமல் பேருந்துகள் இயக்கப்படுகிறது.பேருருந்து பரமாரிப்பு தொகை குறைக்கவில்லை. பேருந்து ஜப்தி குறித்து ஆய்வு செய்து வருகிறோம். முதல்வரிடம் ஆலோசித்து குழு அமைக்கவுள்ளோம்.

பைக் டாக்சி என்பது தனிநபர் பயன்படுத்தும் வாகனம். அதனை வாடகைக்கு விடும் வாகனமாக கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது. தமிழக அரசை பொறுத்தவரை பைக் டாக்சியை பயன்படுத்தக்கூடாது. காவல்துறை ஆங்காங்கே நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் பைக் மற்றும் டாக்சிக்கு அனுமதி கிடையாது. இவ்வாறு அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துளளார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.