முன்னாள் எம்பி ஆதிக் அகமது சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கு: சிபிஐ.க்கு மாற்ற உச்சநீதிமன்றத்தில் மனு

உத்தரப் பிரதேச மாநிலத்தில் முன்னாள் எம்பி ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதாரர் அஷ்ரப் இருவரையும் சுட்டுக்கொன்ற சம்பவம் தொடர்பான விசாரணையை சிபிஐ.க்கு மாற்றக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம்…

உத்தரப் பிரதேச மாநிலத்தில் முன்னாள் எம்பி ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதாரர் அஷ்ரப் இருவரையும் சுட்டுக்கொன்ற சம்பவம் தொடர்பான விசாரணையை சிபிஐ.க்கு மாற்றக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் பிரக்யாராஜ் பகுதியில் போலீஸ் காவலில் இருந்த முன்னாள் எம்.பி.யும், முன்னாள் ரவுடியுமான ஆதிக் அஹமது அவரது சகோதரர் அஷ்ரப் ஆகிய இருவரையும் மருத்துவ பரிசோதனைக்கு போலீசார் அழைத்து சென்றனர்.

அப்போது இருவரும் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்து சென்று கொண்டிருந்த போது, மர்ம நபர்கள் இருவரையும் சுட்டுக்கொன்றனர். இச்செயலில் ஈடுபட்ட மூவரை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். இதையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகளுடன், அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆலோசனை நடத்தினார். துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்த மூன்று பேர் கொண்ட குழு அமைத்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும், துப்பாக்கிச்சூடு சம்பவத்தின்போது பணியில் கவனக்குறைவாக இருந்ததாக 17 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமது கொல்லப்பட்டதை அடுத்து, உத்தரபிரதேசத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், உத்திர பிரதேசத்தில் காவல்துறை பிடியில் இருந்த பிரபல தாதா “ஆதிக் அகமது” மற்றும் அவரது சகோதரர் அஷ்ரஃப் ஆகியோர் காவல்துறையினர் முன்பாகவே சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பான விசாரணையை சிபிஐ.க்கு மாற்றக்கோரி உச்சநீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி அமிதாப் தாகூர் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.