36 C
Chennai
June 17, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

“கடற்கரையில் மீன் விற்கக் கூடாது, சிலை மட்டும் வைக்கலாமா?” – சீமான் ஆவேசம்

கடற்கரை ஓரத்தில் மீன் விற்க கூடாது என்றால், சிலை மட்டும் வைக்கலாமா என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை கடற்கரை கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையில் உள்ள லூப் சாலையில், அந்த பகுதி மீனவர்கள் கடை அமைத்து மீன்கள் விற்பனை செய்து வருகின்றனர். இங்கு உள்ள மீன் கடைகளில் மீன் வாங்க வருவோர் வாகனங்களை சாலைகளிலேயே நிறுத்துவதால், அந்த சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுவதாகவும், அதனால் உடனடியாக கடைகளை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம், மாநகராட்சிக்கு உத்தரவிட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனையடுத்து, சாலையோர மீன் கடைகளை, மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நொச்சிக்குப்பம் பகுதி மீனவர்கள் இன்று அப்பகுதியில் தற்காலிக டெண்ட் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலையின் நடுவே படகுகளை வைத்தும், படகுகளில் கறுப்புக் கொடிகளை கட்டியும், சாலைகளில் மீன்களை கொட்டியும் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சென்று போராட்டத்தில் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான் , மாண்புமிகு நீதி அரசர் இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்த இடம் மீனவ மக்களின் வாழ்வாதாரம். அந்த வாழ்விடத்தை சிதைக்கும் வகையில் எந்த நடவடிக்கையும் இருக்கக் கூடாது. மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபடுவது வேதனையாக இருக்கிறது.

ஒரு கொடைக்கு கீழே தான் மீனவர்கள் கடையை நடத்தி வருகின்றனர். இந்த இடத்தை அகற்றுவதற்கு என்ன அவசியம் வந்தது. கடற்கரையில் மீன் விற்க கூடாது என்றால், கடலுக்குள் பேனா மட்டும் வைக்கலாமா? இதற்கு உங்களிடம் பதில் இருக்கிறதா?. கடற்கரை ஓரத்தில் மீன் சந்தை போட்டு விற்கக் கூடாது என்றால், கடற்கரையில் சமாதி மட்டும் கட்டி எல்லோரையும் புதைக்கலாமா? இது ஏற்புடையதா என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், உலகப் புகழ் பெற்ற இந்த கடற்கரையில் மீன் விற்க கூடாது, சமாதி வைக்கலாம் என்று நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்திருக்கிறது. சமாதி கட்டுவதில் காட்டும் வேகத்தை, மீனவர்களுக்கு சந்தை கட்டுவதில் ஏன் அரசு காட்டவில்லை. இந்த மீன் சந்தை மக்கள் வாழ்விடத்திற்கு பக்கத்தில் இருப்பதினால் தான் மக்கள் கூட்டம் வருகிறது. விற்பனை செய்யும் இடம் தூரத்தில் இருந்தால் அதில் எந்த பயனும் இல்லை.
இந்த மக்கள் இங்கு மீன் விற்பதால், யாருக்கு என்ன இடையூறு வந்தது.

இந்த மீனவர்களின் பிரச்சனைக்கு நியாயமான தீர்ப்பு கிடைக்காவிட்டால் நான் வழக்கு போடுவேன். இல்லையென்றால் மக்களை ஒருங்கிணைத்து போராட்டம் வெடிக்கும். போராட்டமாக உருவாக்கிட கூடாது என்றால் உடனடியாக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீமான் தெரிவித்துள்ளார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading