மும்பையில் இந்தியாவின் முதல் ஆப்பிள் ஸ்டோரை அந்நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரி டிம் குக் திறந்து வைத்தார்.
தொழில்நுட்ப உலகில் ஜாம்பவானாக திகழ்ந்து வரும் ஆப்பிள் நிறுவனம் உலகளவில் மிகவும் பிரபலமான ஒன்று. தொழில்நுட்பம் பற்றி தெரிந்த அனைவருமே, ஆப்பிள் நிறுவனம் தயாரிக்கும் கேட்ஜெட்டுகளை கையில் வைத்திருக்க வேண்டும் என்று விரும்புவர். அந்த அளவு, பல்வேறு வசதிகளும், பாதுகாப்பும் கொண்ட ஆப்பிள் நிறுவனத்தின் பொருட்கள், இந்தியாவில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
உலகளவில் 500க்கும் மேற்பட்ட நகரங்களில் தனது ஸ்டோர்களை நிறுவி வெற்றிகரமாக இயங்கி வரும் ஆப்பிள் நிறுவனம், இந்தியாவில் நேரடி விற்பனையகத்தை நிறுவாமல் இருந்தது. இந்நிலையில், இந்தியாவுடனான 25 ஆண்டு வர்த்தகத்தை கொண்டாடும் வகையில், மும்பை மற்றும் டெல்லியில் ஆப்பிள் ஸ்டோரை நிறுவுவதற்கான நடவடிக்கையில், அந்நிறுவனம் நீண்ட நாட்களாக ஈடுபட்டிருந்தது. அதற்கான பணிகள் அண்மையில் நிறைவு பெற்றன.
இதனைத் தொடர்ந்து, மும்பையின் பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் பகுதியில் அமைக்கப்பட்ட இந்தியாவின் முதல் ஆப்பிள் ஸ்டோர் இன்று திறக்கப்பட்டது. இந்த ஸ்டோரை ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டிம் குக் திறந்து வைத்தார். முன்னதாக வாடிக்கையாளர்கள் பலர் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அவர்களை டிம் குக் மகிழ்ச்சியுடன் வரவேற்றார். இந்த காணொலி சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
ஆப்பிள் ஸ்டோரின் திறப்பு விழாவிற்கு வருகை தந்திருந்த ஒருவர், ஆப்பிள் நிறுவனத்தால் கடந்த 1990 ஆம் ஆண்டுகளில் தயாரித்து விற்பனை செய்யப்பட்ட பழமையான கணிப்பொறியை எடுத்து வந்து ஆச்சரியப்படுத்தினார். அவருடன் ஆப்பிள் சிஇஓ டிம் குக் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.








