முதல் தகவல் அறிக்கை (FIR) என்றால் என்ன? இதனால் ஒருவர் சந்திக்கக்கூடிய பாதிப்புகள் என்ன?

முதல் தகவல் அறிக்கை பற்றியும் இந்த முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டால் ஒருவர் சந்திக்கக்கூடிய பாதிப்புகள் என்ன என்பது பற்றியும் காண்போம் முதல் தகவல் அறிக்கை என்பது அனைவராலும் கொடுக்க இயலும். உதாரணமாக பேருந்து…

முதல் தகவல் அறிக்கை பற்றியும் இந்த முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டால்
ஒருவர் சந்திக்கக்கூடிய பாதிப்புகள் என்ன என்பது பற்றியும் காண்போம்

முதல் தகவல் அறிக்கை என்பது அனைவராலும் கொடுக்க இயலும். உதாரணமாக
பேருந்து பயணம் ஒன்றில் பயணிகள் யாரேனும் ஒருவரை ஒருவர் ஆயுதத்தால்
தாக்கி சண்டையிட்டு கொண்டால், யார் வேண்டுமானாலும் அவசர எண் 100ன்
மூலம் காவல்துறைக்கு தகவல் கொடுக்கலாம். அந்த நபருக்கும் சர்ச்சைக்கும்
சம்பந்தம் இருக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை. இந்த விசாரணைக்கான
முதல் படியை தொடங்கி வைத்ததே அந்த நபரின் பங்களிப்பு.

 

 

அதன் பிறகு காவல்துறையினர் சம்பந்தப்பட்ட இரு தரப்பினரின் கூற்றுகளையும் ஆராய்ந்து,
அதில் தவறு செய்தவர்க்கு எதிராக முதல் தகவல் அறிக்கையை பதிவு
செய்வார்கள். அறிக்கை பதிவானதும், விசாரணை மேற்கொள்ளப்பட்டு
குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும். அதன் பிறகே வழக்கு அடுத்த
கட்டத்திற்கு செல்லும்.

முதல் தகவல் அறிக்கையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து வழக்கறிஞர்
தியாகராஜன் நியூஸ்7 தமிழின் மாண்புமிகு நீதியரசர்கள் நிகழ்ச்சியில்
பிரத்யேகமாக பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:

இந்த முதல் தகவல் அறிக்கை என்னும் எஃப்.ஐ.ஆர் உங்கள் மீது பதியப்படும்
பட்சத்தில் அரசு வேலைவாய்ப்புகள் உங்களுக்கு மறுக்கப்படும். இந்திய பார்
கவுன்சிலிலும் கூட உறுப்பினராகும் வரை சம்பந்தப்பட்ட நபர் மீது எந்த வித
முதல் தகவல் அறிக்கையும் இருக்கக்கூடாது. ஒருவருக்கு உங்கள் மீது ஏதேனும்
வன்மம் இருக்கும் பட்சத்தில், எதாவது ஒரு காரணத்தை வைத்து உங்கள் மேல்
எஃப்.ஐ.ஆர் பதிவிடுவதன் மூலம் நிச்சயம் உங்களுக்கான அரசு வேலைவாய்ப்பை
தடை செய்ய முடியும். சமீபத்தில் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலத்தின்
சண்டீகர் உயர்நீதிமன்றத்தில், ஒரு நபரின் பெயர் மட்டும் எஃப்.ஐ.ஆர்-ல் இடம்
பெற்றிருந்தால், குற்றத்திற்கும் அந்த நபருக்கும் எந்த வித தொடர்பும் இல்லை
என்றால், அதற்காக அந்த நபர் அரசு வேலையை இழக்க வேண்டியதில்லை என
தீர்ப்பளிக்கப்பட்டது.

 

குற்றவியல் நடைமுறை சட்டத்தின்படி, சிறிய குற்றத்திற்கான வழக்குகளுக்கு
ஒரு வருடத்திற்குள்ளாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும்.
இதுவே பெரிய குற்றத்திற்கான வழக்குகள் என்றால் 3 வருடத்திற்குள்ளாக
குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும். உங்கள் வழக்கானது
வேண்டுமென்றே இழுத்தடிக்கப்படும் பட்சத்தில் ஒரு வழக்கறிஞரை தொடர்பு
கொள்வதே சரி. வழக்கறிஞரின் உதவியுடன் உயர்நீதிமன்றத்தின் உள் உறைந்த
அதிகாரத்தின்படி, பிரிவு 482ஐ பயன்படுத்தி உங்கள் மீது வேண்டுமென்றே
போடப்பட்ட முதல் தகவல் அறிக்கையை உடைக்க முடியும்.

எந்தெந்த குற்றங்களுக்கு முதல் தகவல் அறிக்கையானது பதிவு செய்யப்படும்
எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு, பொது மக்களை அச்சுறுத்தும் அனைத்து பிரச்னைகளும் குற்றவியல் செயல்களாகவே கருதப்படும். இந்த வழக்குகள் அனைத்தும்
முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்வதன் மூலமே தொடங்குகிறது.
சமூகத்தை மையப்படுத்திய குற்றங்களுக்கு அரசு தான் முதலாவதாக
செயல்படும். பாதிக்கப்பட்ட தரப்புக்கு அரசே வழக்கறிஞரை நியமித்து வழக்கை
அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல உதவும். பக்கத்து வீட்டை சேர்ந்தவர்
செய்யும் நில ஆக்கிரமிப்பு பிரச்னைகள் குற்றவியல் வழக்காக கருதப்படாது.
அவை சிவில் வழக்குகளின் பிரிவில் அடங்கும் என வழக்கறிஞர் தியாகராஜன்
தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.