சிவகாசி அருகே ஒரே நேரத்தில் இருவேறு இடங்களில் பட்டாசு விபத்து! பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு

சிவகாசி அருகே ஒரே நேரத்தில் இருவேறு இடங்களில் நிகழ்ந்த பட்டாசு விபத்தில் 10 பேர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த முத்து விஜயன் என்பவருக்கு சொந்தமான ஆர்யா பட்டாசு ஆலை மாரனேரி…

சிவகாசி அருகே ஒரே நேரத்தில் இருவேறு இடங்களில் நிகழ்ந்த பட்டாசு விபத்தில் 10 பேர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த முத்து விஜயன் என்பவருக்கு சொந்தமான ஆர்யா பட்டாசு ஆலை மாரனேரி தாலுகாவுக்கு உட்பட்ட போடு ரெட்டியாபட்டியில் இயங்கி வருகிறது.  இந்த பட்டாசு ஆலையில் சுமார் 80-க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன.  இதில் இன்று வழக்கம் போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தில் அந்த அறையில் பணிபுரிந்து கொண்டிருந்த வேம்பு என்கிற தொழிலாளி உடல் கருகி நிகழ்விடத்திலேயே உயிர் இழந்தார்.  தகவல் அறிந்து விரைந்து வந்த சிவகாசி தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து மாரனேரி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதே போன்று சிவகாசி அருகே உள்ள M. புதுப்பட்டி ரெங்கபாளையம் பட்டாசு ஆலை முன்பு செயல்பட்ட கனீஸ்கர் பட்டாசு கடையில் நடந்த வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். நிகழ்விடத்திற்கு தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.  அதோடு மீட்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.  பட்டாசு கடையில் இருந்தவர் எத்தனை பேர்,  வேறு யாரும் இந்த விபத்தில் சிக்கியுள்ளனரா உள்ளிட்ட தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை.  தீ முற்றிலுமாக அணைக்கப்பட்ட பின்னரே உயிரிழந்தவர்கள்,  காயமடைந்தவர்கள் விவரங்களை முழுமையாக கூறமுடியும் என தீயணைப்பு துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே,  இந்த இரு விபத்துகளிலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10ஆக உயர்ந்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.