தானியங்கி டாஸ்மாக் தொடங்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தன்னுடைய இருப்பை காட்டிக்கொள்ள உண்மைக்கு மாறாக அறிக்கை வெளியிட்டிருப்பதாக அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சித்துள்ளார்.
தானியங்கி டாஸ்மாக் மூலம் மது விற்பனை தொடங்கியுள்ளதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், இளைஞர்களை பாதிக்கும் வகையில் தானியங்கி மூலம் மதுபான விற்பனையை திமுக அரசு தொடங்கியுள்ளது கண்டனத்திற்குரியது என கூறியிருந்தார். தமிழ்நாடு முழுவதும் இதுபோல 500-க்கும் மேற்பட்ட தானியங்கி இயந்திரங்கள் பொருத்தப்பட உள்ளதாக வெளியாகும் தகவல்கள், மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.
மேலும், மக்கள் நலன் மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொள்ளாமல் வருவாயை மட்டும் கருத்தில் கொண்டு இதுபோன்ற செயல்களில் அரசு ஈடுபட்டுள்ளதாக கூறிய எடப்பாடி பழனிசாமி, தானியங்கி டாஸ்மாக் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.
கோயம்பேட்டில் ஏற்கனவே செயல்பட்டுவரும் Mall shopகளில் தான் தானியங்கி எந்திரம் நிறுவப்பட்டிருக்கிறதென தமிழ்நாடு மாநில வாணிபக்கழகம் நேற்றே தெளிவான குறிப்பை வெளியிட்ட பிறகும், 'உள்ளேன் அய்யா' என இருப்பை காட்டிக்கொள்ள, உண்மைக்கு மாறாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார் திரு.பழனிசாமி.
— V.Senthilbalaji (@V_Senthilbalaji) April 29, 2023
இந்நிலையில், திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்திருந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு ட்விட்டரில் பதிலளித்துள்ள அமைச்சர் V.செந்தில் பாலாஜி, “கோயம்பேட்டில் ஏற்கனவே செயல்பட்டு வரும் Mall shopகளில் தான் தானியங்கி எந்திரம் நிறுவப்பட்டிருக்கிறது என தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் நேற்றே தெளிவான குறிப்பை வெளியிட்ட பிறகும், இருப்பை காட்டிக்கொள்ள, உண்மைக்கு மாறாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி” என்று தெரிவித்துள்ளார்.







