பயிர்க் காப்பீடு தேதி நீட்டிப்பு: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கோரிக்கை

விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வதற்கான கடைசி தேதியை நீட்டிக்க வேண்டுமென மத்திய அரசுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரத்தில் பெய்த கனமழை காரணமாக பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.…

விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வதற்கான கடைசி தேதியை நீட்டிக்க வேண்டுமென மத்திய அரசுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரத்தில் பெய்த கனமழை காரணமாக பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. டெல்டா மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான நெற்பயிகள் நீரில் மூழ்கின. மழை காரணமாக பயிர் காப்பீடு செய்வதற்கான தேதியை நீட்டிக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இன்று கடிதம் எழுதியுள்ளார். அதில்,  “நடப்பு ஆண்டில் சம்பா, தாளடி பருவ நெற்பயிரை சாகுபடி செய்துள்ள டெல்டா மாவட்டங்கள் உட்பட 26 மாவட்ட விவசாயிகள் உடனடியாக பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வரும் 15 ஆம் தேதிக்குள் காப்பீடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்” என சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்நாட்டில் 10 லட்சம் விவசாயிகள் சுமார் 25 லட்சம் ஏக்கர் பயிர் செய்துள்ள நிலையில், 8.75 லட்சம் விவசாயிகள் தங்களின் 12 லட்சம் ஏக்கர் அளவில் மட்டுமே காப்பீடு செய்துள்ளனர் என்று குறிப்பிட்ட அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வடகிழக்கு பருவமழை காரணமாக இ-சேவை மையங்கள் செயல்படவில்லை என்றும் கூறியுள்ளார்.

மேலும், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் உள்ளிட்ட 26 மாவட்டங்களில் நெற்பயிரை காப்பீடு செய்வதற்கு வரும் நவம்பர் 15 ஆம் தேதி கடைசி என அறிவிக்கப்பட்டதை வரும் நவம்பர் 30 வரை நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.