பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவின் சென்னை மேற்கு மாவட்ட நிர்வாகிகள் 13 பேர் அக்கட்சியிலிருந்து கூண்டோடு விலகியுள்ளனர்.
தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை மீது அதிருப்தி கொண்ட முக்கிய பொறுப்புகளில் உள்ள நிர்வாகிகள் பலர் , அக்கட்சியில் இருந்து ஒவ்வொருவராக வெளியேற தொடங்கியுள்ளனர். அக்கட்சியில் இருந்து வெளியேறும் நிர்வாகிகளை அதிமுக தலைமை அரவணைக்கத் தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் பாஜக தொழில்நுட்ப பிரிவு தலைவர் நிர்மல் குமார் பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்து ராஜினாமா செய்வதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அந்த அறிக்கையில், அண்ணாமலையின் ஒவ்வொரு செயல்பாடுகள் குறித்தும் கட்டமாக விமர்சனம் செய்திருந்தார். பின்னர் பாஜகவிலிருந்து விலகிய சிடிஆர். நிர்மல் குமார் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். நிர்மல் குமார் அதிமுகவில் இணைந்ததற்கு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது வாழ்த்துகளை தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக இருந்த சிடிஆர் நிர்மல் குமாரை தொடர்ந்து, தகவல் தொழில் நுட்ப பிரிவு மாநில செயலாளர் திலீப் கண்ணன், ஓபிசி அணியின் மாநில செயலாளர் அம்மு என்கிற ஜோதி , தமிழக பாஜகவின் அறிவு சார் பிரிவின் முன்னாள் மாநில செயலாளர் கிருஷ்ணன், திருச்சி புறநகர் மாவட்ட துணைத்தலைவர் விஜய் உள்ளிட்ட பலரும், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு நேரில் சென்று, நேற்று தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.
இவர்களை தொடர்ந்து, பாஜக கட்சியில் இருந்து மீண்டும் மாவட்ட தலைவர், துணைத் தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் என பலரும் விலயுள்ளனர். பாஜக உள்ளாட்சி மேம்பாட்டுப் பிரிவு மாநில செயலாளர் லதா, தாம்பரம் பகுதியை சேர்ந்த பாஜக உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு ஒன்றிய தலைவர் வைதேகி ஆகியோர் நேற்று இரவு எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
இந்த நிலையில் இன்று பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு மேற்கு மாவட்ட தலைவர் ஒரத்தி அன்பரசு, அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும் பாஜக தொழில்நுட்ப பிரிவு துணைத் தலைவர்கள் சரவணன், ராமாபுரம் ஸ்ரீராம் உள்ளிட்ட 12 பேர் கட்சியில் இருந்து விளகியுள்ளனர். இவர்கள் அனைவரும் அதிமுகவில் இணையப் போவதாக அறிவித்துள்ளனர். நிர்மல்குமாரின் அரசியல் பாதைதான் தங்களுடையது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு மேற்கு மாவட்ட தலைவர் அன்பரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியில் சில காலமாக அசாதாரன சூழ்நிலை நிலவி வந்த நிலையில் ஒரு சில தினங்களாக பலர் என்னை தொடர்பு கொண்டு சில விளக்கங்களை கேட்க ஒரே சமயத்தில் அழைக்க முற்படும்பொழுது சிலருக்கு விளக்கம் அளிக்க முடியாத நிலை உருவாகிறது. ஆகவே என்னுடைய நிலையை அனைவருக்கும் தெரிவிக்க வேண்டிய கடமை தற்பொழுது எனக்கு ஏற்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக பாஜக-வில் பயணித்துள்ளேன். அதில் கட்சி பொறுப்பு என்பது ஒரு சில ஆண்டுகள்தான். பதவி என்பதை எதிர்பார்த்து பணிபுரிபவன் அல்ல என்பது என்னை சுற்றி இருப்பவர்களுக்கு அனைவருக்கும் தெரியும். என் பணிகளை அனைவரும் அறிவீர்கள் என்று நம்புகிறேன். இத்தனை காலம் எனக்கு எதிரான அச்சுறுத்தல்களையும் புகார்களையும் எவ்வாறு நான் எதிர்கொண்டேன் என்று எண்ணி பார்க்கையில் எனக்கே வியப்பாக இருக்கிறது.
தகுதியற்றவன் என்று கூறி தரம் பிரிக்கும் சுயநலக்காரர்களின் சூழ்ச்சிகளுக்கு பலியாக விரும்பவில்லை. துஷ்ட சக்திகளிடம் இருந்து காத்துக் கொள்ளும் பரிகாரம் ஆகவே இதை செய்கிறேன். நிச்சயமாக தி.மு.க-வில் இணையமாட்டேன். திமுசு-வை விமர்சிக்கவே பாஜக-வில் இருந்து விலகுகிறேன். தொடர்ந்து என் மீது அன்பு காட்டி வரும் நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் என் உளப்பூர்வான நன்றிகள். என்னுடன் கட்சியில் இணைந்து பணி செய்து வரும் அன்பு சகோதரர்களின் எண்ணங்களுக்கு மதிப்பளிக்கும் வகையிலும் அவர்களது வலியுறுத்தலின் பேரிலும் அன்புக்குரிய தலைவர் திரு C.T.R. நிர்மல் குமார் அவர்களுடன் அரசியல் பாதையில் பயணிப்பது என்று முடிவு எடுத்துள்ளதாக அன்பரசு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
- பி.ஜேம்ஸ் லிசா